-
AK-79
காத்தான்குடி: சஹ்ரான் காசிமின் 2017 இற்கு பின்னர் உள்ள பயங்கரவாத ஈர்ப்பு விவகாரங்களைவிட்டுவிட்டு 2017 இற்கு முன்னர் உள்ள விவகாரங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து நாளொரு காணொளியையும் அறிக்கைகளையும் வெளியிடும் அரசாங்கமும், தனியார் சிங்கள ஊடகங்களின் செயற்பாடுகளையும் பார்க்கும்போது ஓர் நாடகம் அரங்கேறி இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
சஹ்ரான் காசிமின் 2017 தலைமறைவுக்குப் பின்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை ஆராய அல்லது கண்டுகொள்ளத் தவறிய அரசாங்கமோ, சிங்கள ஊடகங்களோ இன்று 2017 இற்கு முன்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் யார் யார் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள், அவர்களுடன் எந்த அமைப்புக்கள் கலந்துரையாடின, எந்த அரசியல்வாதிகள் கைகுலுக்கிக்கொண்டனர் போன்ற ஆவணங்களைத் தொகுத்து, “சஹ்ரானின் காணொளி வெளியானது”, “அறிக்கை கண்டுபிடிக்கப்பட்டது” என்றெல்லாம் தலைப்பிடும் சிங்கள ஊடகங்களின் செய்திக் கிளிப்களைப் பார்க்கும்போது சிரிப்பாகவே இருக்கிறது.
காத்தான்குடியில் 2017 மார்ச் மாதம் அப்துர் ரஊப் மௌலவி ஆதரவாளர்களுக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பின் பின்னர் சஹ்ரான் காசிம் தலைமறைவானார்.
குறிப்பாக 2018 இலிருந்து முகநூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்த சஹ்ரான் காசிமின் பயங்கரவாத செயற்பாடுகளை அரசாங்கமோ, சிங்கள ஊடகங்களோ, சஹ்ரானை உள்ளுரில் எதிர்த்த எந்த அமைப்புக்களோ கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறிருக்க, 2011 இல் இருந்து 2017 வரைக்கும் குறிப்பாக அலியார் சந்தி கைகலப்பு வரைக்கும் சஹ்ரானுடன் தொடர்பானவர்கள், தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள், பொதுமக்கள், தஃவா இயக்கங்கள், தேசிய தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்த அமைப்புக்கள் தே.தௌ.ஜ.த்துடன் தங்களுக்குள்ள மார்க்க முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள மேற்கொண்ட விவாத மேடைகள், ஒப்பந்தங்கள், தேர்தல் கால அரசியல் ஒப்பந்தங்கள் என்பவைகளின் காணொளிகளையும், புகைப்படங்களையும், எழுத்து ஆவணங்களையும் வைத்து இன்று குறித்த நபர்களைக் கைது செய்தல், சிறைப்படுத்தல், பணம் பறித்தல் போன்ற செயற்பாடுகள் அவசரகாலச் சட்டம் என்ற இரும்புச் சட்டத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதி சஹ்ரான் எனும் ஒரு முகமே அரசாங்கத்துக்கும் சிங்கள பேரினவாதத்துக்கும் தெரியும். ஆனால் ஓர் மார்க்க பேச்சாளராகவும், பயங்கரவாதியாகவும் இரு முகங்களில் சஹ்ரானைக் கண்டவர்கள் காத்தான்குடி மக்கள்.
எனவே சஹ்ரானின் இரண்டு முகங்களுக்கும் இரண்டு முகங்களின் கால நேரங்களுக்கும் இடைப்பட்ட செயற்பாடுகளை அரசாங்கத்ததுக்கும் பேரினவாத ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்துவது காத்தான்குடி மக்கள் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும்.
“பயங்கரவாதி சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ் தொடர்பு”
“பயங்கரவாதி சஹ்ரானின் காணொளி வெளியானது”
இவ்விரு தலைப்புக்குள் உள்ளடங்கி இருக்கும் விடயத்தைப்பார்த்தால் அவை 2017 இற்கு முன்னர் நடந்தவையாக இருக்கும்
சஹ்ரானின் தீவிரவாத செயற்பாடுகளை அறிந்துகொள்ள வேண்டுமானால் 2017 அவரது தலைமறைவுக்குப் பின்னர் ஆயந்து நோக்குவதே சாலச்சிறந்தது.
தங்கள் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளும், சிறை சென்றவர்களும் கூடி இருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையில் எமது உலமாக்களும், அரசியல்வாதிகளும் குற்றவாளிக்கூண்டில் நிற்பவர்கள் போல் இவர்களது கேள்விகளுக்கு பதிலளிப்பது இலங்கையில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இது ஓர் நாடகமாகவே தொடர்ந்து செல்லும்! AK-49