“பொம்பு ரோட்டு”

காத்தான்குடியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிறுவர் பெருநாள் பஸார்!

ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு ஒரு நூறு வருட வரலாறு இருக்கிறது.

சம்மேளனத்திற்கு ஒரு ஐம்பது வருட வரலாறு இருக்கிறது.

பொம்பு ரோட்டுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வருடங்களில் வரையறுக்க முடியாது. அது பொம்மி மரங்களோடும், ஆலம் வேர்களோடும் ஒன்றிப்பிணைந்த சரித்திரம்.

மாட்டு வண்டி பயணங்களில் ஆரம்பமாகி ஓர் பிரதான வீதியாக உருவான காலத்தில், காத்தான்குடி மக்களின் வர்த்தகம் துளிர்விட்ட அக்காலப்பகுதியில் இந்த பொம்பு ரோட்டு உருவாகி இருக்கவேண்டும். பொம்பு, ஆல என பண்டைய மக்கள் அழைத்து வந்த நிலையில், ஆங்கிலயர்களின் வருகைக்குப் பின்னர் பொம்மி மரத்தோடு ஆங்கில வார்தையும் கலந்து பொம்பு ரோட்டாக அழைக்கப்படுகிறது.

File picture

இடம்:
செயின் மௌலானா தைக்கா முன்றலில் வெயில் சாயும் பக்கமாக பிரதேச செயலக சந்தியில் இருந்து குட்வின் சந்திவரை உள்ள சிறு தூரம்.

கடை வரிசை ஒழுங்கு:

பொம்பு ரோட்டுக்கு நுழையும் இரு எல்லைகளிலும் கரும்பு, நார்தேங்காய் கடைகளும், உள்ளூர் சர்பத் கடைகளும்…
கடலை/சீவல் கரத்தைகளும் வரவேற்க…
புத்தாடைகளுடன் அத்தர் வாசணைகளும் இரண்டறக்கலக்க பொம்புரோட்டு ஆரம்பமாகும்.

இரண்டு ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரைக்கும் கண்களைக் கொள்ளை கொள்ளும் விளையாட்டுப் பொருட்கள் நிறைந்திருக்கும். விலையுயர்ந்த கடைத் தொகுதிகள் தைக்காவின் முன்றலில் கம்பீரமாகக் காட்சிதரும்.

மத்திய பொம்பு ரோட்டுப் பகுதியில் (அரபிக் கலாசாலை வீதி) பாபுஜீஸ் மற்றும் ரோயல் ஐஸ் வேன்கள் சிறுவர் உள்ளங்களை மகிழ்விக்க இஸ்லாமிய கீதங்களுடன் காத்திருக்கும்.

குட்வின் சந்தியில் பிரிஸ்டல் மற்றும் சவூதி cool bars குளிர்பாணக் கடைகள் வர்ண ஜாலங்களால் அலங்கரித்திருக்கும்.

சிறுவர் இளைப்பாறுமிடம்:

பிரதேச செயலகம் அமைந்துள்ள மையவாடி மையப்பகுதி மற்றும் பஸ்தரிப்பு நிலைய மையவாடி மையப்பகுதி.

Famous Toys:
மருந்து துப்பாக்கி, தண்ணி துப்பாக்கி, கண்ணாடியில் ஒட்டி நிற்கும் துப்பாக்கி, தகர பஸ், ஏ.கே. 47, M16,boat, பலூன் ஊது குழல், கூட்டுக் கரத்த, கிறுக்கி….

பி்.ப.3 மணியிலிருந்து இரவு 8மணி வரைக்கும் இருந்தபோதிலும் மஃரிப் இற்கு முன்னரே சிறுவர்கள் வீடு சேர்ந்துவிடுவர்.

பாதுகாப்பு, அறிவுறுத்தல்கள் எவையுமே கிடையாது!

பெருநாள் காசு இருந்தும் 3 நாட்களுக்கு மேல் நோன்புப் பெருநாள் பொம்பு ரோட்டு நீடிக்காது!

காசு இல்லாமல் இருந்தாலும் ஹஜ் பெருநாள் பொம்பு ரோட்டு 7 நாட்கள் களைகட்டும்.

இறுதியாக 1990 ஜூலை ஹஜ் பெருநாளோடு பல நூறு ஆண்டுகள் வேரூன்றி இருந்த பொம்பு ரோட்டு, அவ்விடத்தில் விடைபெற்றது.

ஒரு வாரம் கழிந்து….
குருக்கல்மடத்தில் இடம்பற்ற புலிகளின் ஆட்கடத்தல் படுகொலையில் இறுதி பொம்புரோட்டு வியாபாரத்தில் ஈடுபட்ட சில வர்த்தகர்களும் சஹீதாக்கப்பட்டனர்.

ரியல் பொம்பு ரோட்டு காத்தமண்வாசனையோடு ஒன்றடக்கலந்தது!
ஆயிரம் களியாட்டங்கள் இன்று இருந்தாலும், இவை அனைத்தும் அன்றைய பொம்பு ரோட்டுக்கு எவ்வகையிலும் நிகராகாது!

முகமட் ஜலீஸ், இங்கிலாந்து

eye of the city