அந்தநாள் ஞாபகம்-8: மார்டின், கோல்ட்லீஃப், டிபி சேர்ட்கள்

ANTHANAAL 8– MJ

காத்தான்குடி: இவ்வாறான நோன்புப் பெருநாள் களைகட்டியிருந்த 1990. இதற்கு முன்னர் பிடவைக்கடைகளில் துணியெடுத்து, டைலர்களிடம் கொடுத்து உடுப்புக்களைத் தைத்துக்கொள்ளும் காலம். சேர்ட்களுக்கென்று ஓர் தனியுகம் ஆரம்பித்திருக்கவில்லை அப்போது. எப்படி வேண்டுமென்றாலும், எத்துணியில் வேண்டுமென்றாலும் தைத்துக்கொள்ளும் காலம் அது.

‘சலஞ்சர்’ துணி இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியை அடுத்து, அறிமுகமாகிறது ‘மார்டின்’ சேர்ட்கள். 1990 இலிருந்து 1991 வரைக்கும் மார்டின் சேர்ட் இலங்கையை கலக்கிச்சோ இல்லையோ காத்தான்குடியைக் கலக்கியது.

1991இல் மீண்டும் ஓர் நோன்புப் பெருநாளில் ‘கோல்ட்லீஃப்’ சேர்ட்கள் அறிமுகமாகின்றன. இதனைத் தொடர்ந்து இதே காலப்பகுதியில் ‘டிபி’ சேர்ட்டும் ஆடவர் யுகத்தை மோப்பம் பிடித்தது.

இவ்வகையான 3 சேர்ட்களும் MJபஞ்சு மற்றும் கம்பளி கலந்த மெல்லிய மிருதுவான ‘பிளேன்’ துணிகளால் வடிவமைக்கப்பட்டு, நேர்த்தியான தையல்களைக் கொண்டு, சாதாரண வடிவில் தைக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டன.

அலுவலகர்களும், தொழிலதிபர்களும், பிரபலங்களும் அணிந்துகொள்ளக்கூடியவடிவில் இத்தகைய சேர்ட்கள் பொது வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர் சேர்ட்டின் பின்புறத்தில் ‘ஃபிளீட்’ வைத்து தைக்கப்பட்ட யுகத்தை அப்புறப்படுத்தி, சேர்ட் என்றால் இதுதான் என்பதை ஆடையுலகுக்கு அத்தகைய சேர்ட்கள் அறிமுகப்படுத்தின.

மெரூன், இளநீறம் ஆகிய வர்ணங்கள் காத்தான்குடியில் பிரபல்யமடைந்திருந்தன.

ஒருசில வசதிபடைத்த மாணவர்கள் வெள்ளை நிறங்களில் இத்தகைய சேர்ட்களை வாங்கி, பாடசாலைக்கு அணிந்து வருவர்.

ANTHANAAL 8

அன்றைய பெறுமதியில் (1990-1992) மார்டின் சேர்ட் 700/-, கோல்ட்லீஃப் சேர்ட் 900/- மற்றும் டிபி சேர்ட் 1000/- ரூபாய்க்கும் கொழும்பில் விற்கப்பட்டன. இத்தகைய சேர்ட்கள் அன்றைய காலப்பகுதியில் காத்தான்குடியில் எக்கடைகளிலும் அன்று விற்கப்படவில்லை.

மத்திய கிழக்கில் இருந்து விடுமுறை வந்தவர்களும், கொழும்பில் வர்த்தகம் செய்வோரும் சில செல்வந்தர்களுமே இத்தகைய சேர்ட்களை அன்று அணியும் அபூர்வம் இருந்தது.

மெலிந்த துணி என்பதால் மேல் உள்ளாடையாக ‘ரைடர்’ பெணியன் அணிவது ஓர் பெருமையை ஏற்படுத்தியிருந்தது. சிலர் தங்களது மேல் உடல் அழகைக் காண்பிப்பதற்காக பெணியன் அணியாமலும் இத்தகைய சேர்ட்களை அணிந்து அன்று கலக்கித் திரிந்தனர். ஒருநூறு ரூபாய் நாணயத்தாளை மடித்து பக்கட்டுக்குள் வைப்பதும் ஒரு கலக்கலாகவே இருக்கும்

இத்தகைய இறக்குமதி சேர்ட்களின் வருகையையடுத்து, காத்தான்குடியில் ‘கார்மெண்ட்ஸ்’ ஆரம்பிக்கப்படுகிறது. இத்தகைய சேர்ட்களுக்கு ஒப்பான துணிகளை கொள்வனவு செய்து உள்ளுரில் மார்டின், கோல்ட்லீஃப் மற்றும் டிபி சேர்ட்கள் தைத்து, இலங்கைக்கு சந்தைப்படுத்தப்படுகிறது.

இக்காலப்பகுதியில் கார்மெண்ட் ஆரம்பித்தவர்கள் இத்தகைய சேர்ட்களின் மோகத்தால் அதிக இலாபங்களை பெற்றனர்.

பிளேன் சேர்ட்டாகவும், எந்த டிசைனுமல்லாமல் சிம்பிளாகவும் இருந்த பிரசித்திபெற்ற இத்தகைய சேர்ட் ஆடையுலகை பின்தள்ளி, இரட்டைக் கொலர், காணும் இடமெல்லாம் பொத்தான்கள், ‘டபல் சீலீவ் ஓபன்’, டபல் பக்கட் என ஆடவர் ஆடையுலகில் மீண்டும் ஓர் புதிய புரட்சியை ஏற்படுத்தியது ‘கஸ்பர்’ எனும் சேர்ட்களாகும்.

இத்தகைய சேர்ட்கள் 1994இல் அறிமுகமாகி 2000 வரைக்கும் இலங்கையிலும், காத்தான்குடியிலும் நிலைத்திருந்தது. இத்தகைய சேர்ட்களும் பிளேன் துணிகளாகவே இருந்தாலும் முழுக்க பஞ்சு (கொட்டன்) துணியினால் ஆனது.

இதன் பின்னர் மத்திய கிழக்கு போக்குவரத்து வளர்ச்சி, சீனா ஆடை இறக்குமதிகளுக்குப் பின்னர் ஆடவர் ஆடைகளில் குறிப்பாக சேர்ட்களில் எத்தகைய குறிப்பிடத்தக்க செல்வாக்கையும் காணமுடியவில்லை.

எந்த டிசைனில் எப்படி சேர்ட் அணிந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.

இப்போது பல ரகங்களில் பல வடிவங்களில் சேர்ட்கள் வந்துள்ளன.

ஆனால் அன்று கலக்கிய அந்த மார்டின், கோல்ட்லீஃப், டிபி மற்றும் கஸ்பர் சேர்ட்களை மறக்க முடியாது.MJ

Published by

Leave a comment