– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
கொழும்பு: முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (11.03.2015) கொழும்பில் கையளித்துள்ளது. இம்முறைப்பாடு NFGGயின் சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ALM சபீல் அவர்களால் இன்று காலை 10.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினாலும் அவரது சகாக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிக நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகிறது.
காத்தான்குடி நகரசபையில் பிரதான எதிர்கட்சியாக அங்கம் வகிக்கும் NFGG அங்கு நடைபெறும் பல்வேறு மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக நகரசபைக்குள்ளேயும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்திருக்கிறது. பல்வேறு மோசடிகளை ஆதார பூர்வமாக NFGG முன்வைத்த போதிலும் அவற்றைத் திருத்திக் கொள்வதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பூரண கட்டுப்பாட்டில் இயங்கும் காத்தான்குடி நகரசபை ஒரு போதும் முன்வரவில்லை.
அது போன்றே காத்தான்குடி நகரசபைக்கு வெளியில் ஹிஸ்புல்லாஹ்வினால் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றில் நிகழ்ந்த பாரிய மோசடிக்கள் தொடர்பாகவும் NFGG பல்வேறு தரப்பினருக்கும் சுட்டிக்காட்டி வந்தது. அவை தொடர்பிலும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் NFGG நடாத்திய ஊடக சந்திப்பின்போது, ஒரு விசேட உள்ளூர் பொறிமுறை ஒன்றின் மூலம் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் NFGG கோரியிருந்தது.
அத்தோடு, இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிடம் இவர் தொடர்பிலான முறைப்பாடுகள் கையளிக்கப்படும் எனவும் NFGG தெரிவித்திருந்தது. அந்த வகையிலேயே இன்று ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இம்முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களையும் சாட்சியங்களையும் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் NFGG ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published by



Leave a reply to அடங்காச் சோனகன் Cancel reply