காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (20), காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் இஸ்லாமிய மாநாடு ஒன்று நடைபெற்றது.
காத்தான்குடி பஸ்மலா சதுக்கத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாடு பொலிசாரின் வேண்டுகோளுக்கமைய இடம் மாற்றம் செய்யப்பட்டது.
மாலை 6.45 மணியலவில் ஆரம்பமான இம் மாநாடு, இரவு 9.45 மணிக்கு நிறைவு பெற்றது.
‘கலிமாவை அறிவதன் அவசியம்’ எனும் தலைப்பில் மௌலவி எஸ்.எம். அப்துல் ஹமீத் (ஷரயி)யும் ‘அறிவுபூர்வமான மார்க்கம் இஸ்லாம்’ எனும் தலைப்பில் மௌலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி)யும் சொற்பொழிவாற்றினார்கள்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஜே.பி. உட்பட உலமாக்கள், பெருந் தொகையான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இம் மாநாட்டின் இறுதியில் ‘பிழையான வழிகாட்டலில் அப்பாவி பொதுமக்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்றுகொண்டிருக்கும் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களையும், அவரது றப்பானீக்களையும் சுமுகமான கலந்துரையாடலுக்கோ அல்லது பகிரங்க விவாதத்திற்கோ வருமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா இம் மேடையில் பகிரங்கமாக அழைக்கிறது எனவும், இன்றிலிருந்து (20.04.2014) சரியாக 1 மாத காலத்திற்குள் இதற்கான பதிலை அவர்கள் தெரியப்படுத்த வேண்டும் எனவும்’ மௌலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி) அழைப்பு விடுத்தார்.
இம் மாநாட்டில் தர்ஹா வழிபாடு மற்றும் சேகுமார்களின் மார்க்க விரோத செயல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a reply to abdullah Cancel reply