கொழும்பு: இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை செவ்வாய்க்கிழமை (2) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோது, மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அரசாங்கத்தால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, மிகவும் பாரதூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படுமானால், தாம் ஆட்சிப்பீடம் ஏறியவுடன், அந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.
இதேவேளை, வில்பத்து பகுதியில் காடுகளை அழிப்பதற்கு அனுமதியை, தனது ஆட்சிக் காலத்தில் வழங்கவில்லை எனவும் அவர் கூறினார்.எனினும், அண்மை காலத்தில் வில்பத்து பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், போர் முடிந்தவுடன் தமது அரசாங்கம் வட மாகாணத்தில் தேர்தலை நடத்தியதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அதனூடாக வட மாகாண மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.