கொழும்பு: “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் மரணிப்பார்” என கணிப்பு கூறிய ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். மேற்படி வழக்கை சட்டமா அதிபர் மீளப்பெற்றமையினால், ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்த ஜோதிடர் இலங்கை கடற்படையில் கடமையாற்றியவர் என்பதும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்திய கடற்படைச் சிப்பாய் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விஜித ரோஹன விஜேமுனி/yourkattankudy
இந்திய பிரதமரை தாக்கிய குற்றத்துக்காக இவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதும், இரண்டரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ வழங்கிய பொதுமன்னிப்பின் கீழ் இவர் விடுதலையானார்.
இதன் பின்னர், இவர் ஒரு ஜோதிடராகப் பிரபல்யமானதோடு, அரசியலிலும் அரசியல் பிரமுகர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் நடக்கும் என உறுதியிட்டு, பல்வேறு முன் அறிவிப்புக்களை கூறி வந்தார்.