கனடாவின் கியுபக் நகர பள்ளிவாசல் ஒன்றில் மாலை வேளைத் தொழுகையின்போது இடம்பெற்ற சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டதோடு மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
கியுபக் நகர கலாசார மையத்தில் ஞாயிறு இரவு சுமார் 40 பேர் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோதே துப்பாக்கிதாரிகள் சூடு நடத்தியுள்ளனர்.
இரு சந்தேகநபர்களை கைது செய்திருப்பதாக கூறிய பொலிஸார், குறித்த நபர்களில் ஒருவர் ‘லோன் வொல்ப்’ (Lone Wolf) பல்கலைக்கழக மாணவன், அலெக்ஸாண்டர் பிஸ்ஸோனெற் (Alexandre Bissonnette) என தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் ஈடுபட்டதாக பார்த்தவர்கள் கூறியபோதும் இருவரே தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ஆயுதங்களுடன் தந்திரோபாய ரீதியில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தனர். அங்கிருந்து பலரும் அப்புறப்படுத்தப்பட்டனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் என்று இதை வர்ணித்து அதைக் கண்டனம் செய்தார்.
இந்த தாக்குதலுக்கு முன்னர் பள்ளிவாசலுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் வரவில்லை என்று பள்ளிவாசலின் தலைவர் முஹமது யங்குயி குறிப்பிட்டுள்ளார். பள்ளிவாசலுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த பள்ளிவாசல் கடந்த காலத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளது. கடந்த 2016 ஜுன் ரமழான் காலத்தில் பள்ளிவாசல் கதவருகில் பன்றித் தலை ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த கலாசார மையம் நகரில் இருக்கும் ஆறு பள்ளிவாசல்களில் மிகப்பெரியதாகும். இது சுமார் 5,000 உறுப்பினர்கள் கொண்ட பள்ளிவாசலாகும்.
அண்டை நாடான அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை விதித்தது குறித்து பரந்த அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.