காத்தான்குடி: படித்தலில் ஆர்வமுடைய அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்ததுதான் பொது நூலகமாகும். காத்தான்குடியில் 1975ம் ஆண்டிலிருந்து (41 ஆண்டுகளாக) இயங்கிவரும் பொது நூலகமானது, கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்ததோடு, தற்போது காத்தான்குடி நகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி நூலகமானது நூற்றுக்கணக்கான மாணவர்களை அரச அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும், கல்விமான்களாகவும், பட்டதாரிகளாகவும், வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும் மற்றும் பல துறைகளிலும் உருவாக்கிய முக்கிய காரணிகளிலொன்றாக இருந்துவருவதோடு மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், வாசிப்பு பிரியர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றுசேரும் முக்கியமானதொரு பொழுதுபோக்கு ஸ்தலமாகவும் காணப்படுகின்றது. எமது சந்ததிகளுக்கும் இதன் சேவை தொடர பிரார்த்திப்போம்.
பொது நூலகங்கள் முழுமையான சேவையை வழங்குவதற்கும், உயிரோட்டமுள்ளதாக இருப்பதற்கும், தன்னகத்தே அனைத்து துறைகளையும் சார்ந்த நூல்களையும், தகவல்களையும் கொண்டிருப்பதோடு, புதிதாக வெளிவரும் நூல்களை தொடர்ச்சியாக சேகரிக்கும் வழமையும், நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பழமையான நூல்களையும், தகவல்களையும் மட்டுமே கொண்டிருக்குமாயின், காலப்போக்கில் இவ்வாறான நூலகங்கள் அருங்காட்சியகங்கள் போன்று காட்சியளிப்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
பொது நூலகங்கள் இவ்வாறான நிலமையை எதிர் நோக்குவதற்கு நிதிப்பற்றாக்குறையே பிரதான காரணமாக இருப்பதோடு; பொது நூலகங்களின் பராமரிப்பிற்கும், அபிவிருத்திக்கும் அரச உதவிகள் மட்டுமன்றி, தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க முன்வரவேண்டும்.
காத்தான்குடி பொது நூலகமானது பாரிய நூல்கள் பற்றாக்குறையுடன் இயங்கிவருவதோடு, இதுவரை காலமும் சிறுவர் நூலக பிரிவையும் அமைத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதன்காரணமாக அங்கத்தவர்களினதும், மாணவர்களினதும், சிறுவர்களினதும் தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமத்தையும், சங்கடத்தையும் எதிர்நோக்கிவருகின்றது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையிலும், மிகமுக்கியமாக மாணவர்களினதும், இளைஞர்களினதும், சிறார்களினதும் நன்மை கருதியும் காத்தான்குடி பொது நூலகத்திற்காக பாரிய நூல் சேகரிப்பொன்றை மேற்கொள்ளவேண்டியது இன்றைய அவசரமானதும், அவசியமானதுமான தேவையாக உள்ளது.
மேற்படி நிலமையை கருத்திற்கொண்டு, லங்கா ரிலீப்(f) அன்ட் சரிடீஸ் [Lanka Relief & Charities] LRC அமைப்பானது, காத்தான்குடி பொது நூலகத்திற்காக 10,000 நூல்களை சேகரிக்கும் திட்டத்தையும், சிறுவர் நூலக பிரிவை அமைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. இதற்காக இலங்கையில் பாடசாலைக் கல்விக்கு உதவியாகவுள்ள நூல்களும், இந்தியாவில் இரவல் பகுதிக்கான நூல்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
தற்போது நூலகத்தின் இரவல் பகுதியானது பொது நூலகத்தின் கட்டிடத்திலும், நடமாடும் சேவையின் மூலமும் இயங்கிவருவதனால், இரவல் பகுதிக்கான நூல்களின் தேவை மிகவும் அதிகமாக இருப்பதோடு, இதன் மூலம் மிகவும் அதிகமான அங்கத்தவர்களும் நன்மையடைகின்றனர்.
இன்ஷா அல்லாஹ், இத்திட்டத்தின் மூலம் காத்தான்குடி பொது நூலகத்தில் அனைத்து வகையான நூல்களும் கிடைக்கப்பெறுவதோடு, புதிதாக அமைக்கப்படவுள்ள சிறுவர் நூலக பிரிவின் மூலம் சிறுவர்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர். அத்தோடு இத்திட்டமானது, எமது எதிர்கால சந்ததியின் கல்வி வளர்ச்சிக்கு நாம் செய்யும் பாரியதொரு முதலீடாகவும் அமையும்.
மேற்படி திட்டத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை கொடுத்து உதவுமாறு தயவுடன் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
“ஒரு சிறந்த நூலகம் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்கும்”
Lanka Relief & Charities
லங்கா ரிலீப்(f) அன்ட் சரிடீஸ்E: lankarelief.charities@gmail.com
M: +94 71 316 4464
Published by



Leave a comment