கல்முனை: உத்தேச அதிகாரப் பகிர்வில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும். என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஓன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனையில் ஒன்றுகூடி தங்களின் இந்தப் பிரகடனத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகங்களிடம் முன் வைக்க முடிவு செய்துள்ளனர். ஒற்றையாட்சி முறையிலான அதிகாரப் பகிர்வு, தற்போதுள்ள ஜனாதிபதி முறை ஆகியனவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அந்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அந்த இணைப்பு முஸ்லிம்களை சிறுபான்மை இனமாக்கும். இன ரீதியான அநீதிக்குள்ளாக்கும். முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளனர். மட்டுமன்றி சுய நிர்ணய உரித்துடையவர்களாகவும் இருப்பதால் அவர்களை ஒரு தேசிய இனமாக உறுதிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது” என்று இந்த பிரகடனம் கூறுகின்றது.
Published by


Leave a comment