பலஸ்தீன்: வரலாறும் தூக்கியெறிய முடியாத உண்மைகளும்

  • றவூப் ஸெய்ன்

palestine_flag[1]உலக வரலாற்றை இன்றிலிருந்து சுமார் 13,000 ஆண்டுகள் முன்பிருந்தே பார்க்கத் தொடங்குவதுதான் பல கேள்விகளுக்கு விடையளிக்கும். மனித இனத்திற்கு அதற்கு முன்பும் ஒரு வரலாறு உண்டு. சுமார் 50 இலட்சம் ஆண்டுகளிலிருந்து தொடங்கி, மனித இனம் பரிணமித்த வரலாற்றுக் காலகட்டங்களிலிருந்து நாம் பல உண்மைகளைத் தேட வேண்டியுள்ளது.

சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் பனி யுகம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் நவீன மனித இனம் குடியேறிவிட்டது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளான்மையும் கால்நடை வளர்ப்பும் ஒரு சில இடங்களில் தோன்றிவிட்டன.

உலகில் முதல் வேளான்மை சமூகம் தோன்றிய இடம் தென்மேற்கு ஆசியாவாகும். ஜோர்தான், சிரியா, துருக்கி என்பவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய மலைகள் நிறைந்த வளைவான நிலப் பகுதி இன்றுவரை வளமான பிறை நிலப் பகுதி என அழைக்கப்படுகின்றது. உலகில் முதல் விவசாயக் குடியிருப்பாக அறியப்படுவது ஜெரிக்கோ என்ற இடமாகும். அதுவும் அங்கேயே உள்ளது.

சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் காட்டுப் பயிர்களாக விளங்கிய ஒரு வகைக் கோதுமையும் பட்டானியும் வேளான்மை உணவுப் பயிர்களாக மாறின. இதற்கு 1000 வருடங்களுக்குப் பின்னரே சீனாவில் அரிசியும் திணையும் உணவுப் பயிர்களாக மாற்றப்பட்டன. (ஜரட் டயமன் – துப்பாக்கிகள், கிருமிகள், உருக்கு)

1970 களில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் கோல்டா மேயர் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரையொன்றில், “அவர்கள் (யூதர்கள்) பலஸ்தீனில் வந்து குடியேறியபோது அந்த நிலம் வெற்றுப் பாலைவனமாகக் காட்சியளித்தது. ஆளரவமற்ற அப்பாலை நிலம் யூதர்களின் வருகையின் பின்தான் செழிப்புற்றது” என்று கூறுகிறார்.

மேலே ஜரட் தனது நூலில் மனித குலம் முதன் முதலில் குடியேறிய பகுதிகளில் ஒன்றாக பலஸ்தீனிலுள்ள ஜெரிக்கோவை அடையாளப்படுத்துகின்றார். இற்றைக்குப் 15,000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. அப்படியிருக்க, கோல்டா மேயர் யூதர்கள் பலஸ்தீனை ஆக்கிரமிக்க முன்னர் அது ஒரு மனித சஞ்சாரமற்ற வெற்றுப் பாலைவனம் என வர்ணிப்பது எவ்வளவு பெரிய அபத்தம். வரலாற்றைத் திருடுவது ஒன்றும் யூதர்களுக்குப் புதியதல்ல.

பலஸ்தீனின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்ற கேள்வி உலக அரசியலில் இன்னும் மங்கலாக நீடிக்கின்றது. யூதர்கள் தமக்குச் சார்பான ஒரு வரலாற்றை பொய்களாலும் போலிகளாலும் நிரப்பி வைத்துள்ளனர். எனவேதான், ஜரட் கூறுவது போல் பல்லாயிரம் ஆண்டுகள் நாம் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் கன்ஆனிய்யூன்கள் வந்து குடியேறிய இடமே இன்றைய பலஸ்தீன். அவர்கள் உருவாக்கிய நகரமே இன்றைய ஜெரூசலம். வரலாற்றில் யேர் ஷலீம், ஓர் ஷலீம் என்றே இந்நகரம் பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டது.

கன்ஆன் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான, பலசாலியான ஓர் அரசன் ஜெரூசலம் நகரை உருவாக்கினான். கன்ஆனிய்யூன்களே இன்றைய பலஸ்தீனர்களின் மூதாதையர்கள். ஓர் ஷலீம் நகரை ஸ்தாபித்த அவன், அங்கு புனித தேவாலயமொன்றையும் நிறுவினான். ஆக, கன்ஆனிய்யூன்களே பலஸ்தீனின் பூர்வீகக் குடிகள்.

முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் Flavius Josephus (37-100) தனது ரோம-யூத யுத்தங்கள் எனும் நூலில், “மெல்கி சேடக்ஸ் எனப்படும் கன்ஆனிய்ய மன்னனே ஜெரூசலத்தை முதன் முதலில் கட்டியெழுப்பியவன். அவன் நிஜமாகவே நேர்மையும் பலமும் கொண்டவன் என்று எழுதுகின்றார்.

கி.மு. 1800 ஆம் ஆண்டளவில் வாழ்ந்து வந்த மெல்கி சேடக்ஸ், நபி இப்றாஹீம் அவர்களின் காலத்தவர் என பைபிள் குறிப்பிடுகின்றது. ஆனால், அவருக்கும் 3800 ஆண்டுகளுக்கு முன்னர் கன்ஆனிய்யூன்கள் பலஸ்தீனில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று இஸ்ரேலும் பலஸ்தீனர்களும் தமக்குரிய தலைநகர் என சர்ச்சைப்படும் ஜெரூசலம் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது. அவர்களே பலஸ்தீனர்களின் மூதாதையர்கள்.

ஆங்கிலம், பிரான்ஸ், ஜேர்மன், லத்தின், கிரேக்கம் போன்ற மொழிகளில் அழைக்கப்படும் ஜெரூசலம் எனும் பெயர் ஓர் ஷலீம் என்ற பழைய பெயரிலிருந்தே பிறந்துள்ளது. கி.மு. 1600 தொடக்கம் 1300 வரையான காலப் பகுதியில் அந்நகரம் எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழிலிருந்தது. ஆனால், ஆட்சி அதிகாரம் தொடர்ந்தும் கன்ஆனிய்ய அரசர்களிடமே இருந்தது. எகிப்தின் பிர்அவ்னிய மன்னர்களுக்கு கன்ஆனிய்யர்கள் திறை செலுத்தி வந்தனர்.

கி.பி. 1897 இல் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பட்டயத் தகடுகள் பிர்அவ்னிய மன்னனுக்கும் ஜெரூசலத்தின் ஆட்சியாளர்களாகிய கன்ஆனிய்ய மன்னர்களுக்கும் இடையில் காணப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் குறித்துப் பேசுகின்றன. ஹாபிர்கள் எனப்படும் இனத்தவர்களின் தாக்குதலிலிருந்து பலஸ்தீனைப் பாதுகாப்பதற்கு பிர்அவ்ன்கள் உதவியளித்தது குறித்தும் பட்டயங்கள் பேசுகின்றன. ஹாபிர்கள் என்போர் யூத இனக் குழுவினர் எனும் ஒரு கருத்தும் உள்ளது.

இக்காலகட்டத்திலேயே எகிப்தில் பனூ இஸ்ரவேலர்கள் பிர்அவ்ன்களால் அடிமைகொள்ளப்பட்டிருந்தனர். பனூ இஸ்ரவேலர்கள் மீது கடும் அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.

பிர்அவ்ன்களிடமிருந்து பனூ இஸ்ரவேலர்களை மீட்டு, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதை எத்திவைக்கும் பொறுப்பு மூஸாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மூஸா ஒரு நபியாக பனூ இஸ்ரவேலர்களிடம் வந்தார். அவர்களை எகிப்திலிருந்து வெளியேற்றி கன்ஆனுக்கு அழைத்துச் சென்றார். கன்ஆன் என்பது பஸ்தீனின் பண்டைய காலப் பெயர்.

மூஸாவைத் தொடர்ந்து இன்னும் இரண்டு நபிமார்கள் தோன்றினர். ஒருவர் தாவூத். இரண்டாமவர் சுலைமான். கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் தாவூத் அலை, கன்ஆனிய்ய நகரை (ஓர் ஷலீம்) கைப்பற்றியதிலிருந்து அங்கு பனூ இஸ்ரவேலர்களின் செல்வாக்கு அதிகரித்தது. கி.மு. 1000 ஆம் ஆண்டளவில் ஜெரூசலம் முதற் தடவையாக யூத நகராக மாற்றப்பட்டது. பின்னர் சுலைமான் நபியவர்கள் ஜெரூசலத்தில் புனித ஆலயங்களை நிறுவினார். சுலைமானின் மரணத்தின் பின்னர் பனூ இஸ்ரவேலர்கள் பலயீனமடைந்தனர். ஒழுக்கச் சீர்கேடுகளோடும் அரசியல் பின்னடைவோடும் 4 நூற்றாண்டுகள் அவர்களது ஆட்சி நீடித்தது. அது வடக்கு கன்ஆனை மட்டுமே உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்வந்த காலங்களில் அசிரியர்கள், பிலீஷியர்கள், எகிப்தியர்கள் போன்றோரின் படையெடுப்பு கன்ஆனின் மீது நிகழ்ந்தது. யூதர்கள் மேற்போந்த வல்லரசுகளுக்கு திறை செலுத்தி வந்தனர். கப்பம் செலுத்தும் நாடாக கன்ஆன் மாற்றப்பட்டது. கன்ஆனின் நீண்ட வரலாற்றில் கி.மு. 587 ஆம் ஆண்டு முக்கியமானது. (இன்னொரு வரலாற்றுக் குறிப்பின்படி இது கி.மு. 585 எனவும் வந்துள்ளது.) இவ்வாண்டில் பபிலோனியர்கள் கன்ஆன் மீது பாரிய படையெடுப்பொன்றை மேற்கொண்டு அதனை முற்றாக கபலீகரம் செய்தனர். யூத தேவாலயங்கள் அழிக்கப்பட்டதோடு, யூதர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

நபிமார்களின் போதனைகளை மறந்து அல்லாஹ்வின் வழிகாட்டலை தமது முதுகுகளுக்குப் பின்னால் பனூ இஸ்ரவேலர்கள் தூக்கியெறிந்ததன் பின்னர் உலகாயுத மோகம் கொண்டு நேர்வழியிலிருந்து மனமுரண்டாக பிறழ்ந்தனர். அதற்கு அல்லாஹ் விதித்த தண்டனையே அவர்கள் மீதான பபிலோனியர்களின் படையெடுப்பாகும்.

இந்த உண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு பகர்கின்றது.

இஸ்ராயிலின் சந்ததிகளாகிய உங்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் இரண்டு முறை பூமியில் விசமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மையடைந்து அக்கிரமம் செய்வீர்கள் என்றும் உங்களுக்களித்த வேதத்தில் நாம் விதித்துள்ளோம். அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் நம் அடியார்களில் இரக்கமற்ற பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று தங்கள் கைக்கெட்டியதையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கி விட்டனர். அதனால் பைதுல் மக்திஸிலிருந்த ஆலயமும் அவ்வூரும் அழிந்து நாசமாகின. இவ்வாறே நம்முடைய முந்திய வாக்குறுதி நிறைவேறியது. (17: 4-5)
இச்சம்பவம் இடம்பெற்று சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரசீக மன்னர் சைரஸ் பபிலோனியர்களின் அஸ் ஸபீ பாலிர் தேசத்தை தோற்கடித்து, பழைய கன்ஆனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். யூதர்களை அங்கு திரும்பவும் குடியேறுவதற்கு அனுமதி வழங்கினார்.

கி.மு. 517 இல் தேவாலயமும் கட்டப்பட்டது. ஈஸ்ரா, தெஹீமிய்யா போன்றோரின் தலைமையின் கீழ் தம்மைத் திருத்திக் கொண்டு யூதர்கள் அங்கு வந்து சில காலம் வாழ்ந்தனர். இதற்கிடையில், பாரசீகர்கள் பபிலோனியர்களை தம்பால் ஈர்த்துக் காண்டனர். இப்புதிய நிலமை பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“பின்னர் உங்கள் காலச் சக்கரத்தைத் திருப்பி, உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து ஏராளமான பொருட்களைக் கொண்டு நாம் உங்களுக்கு உதவினோம். உங்களை பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம். (17:6)

கி.மு. 332 இல் பஸ்தீனமும் ஜெரூசலமும் (கன்ஆன், ஓர் ஷலீம்) பாரசீகர்களிடம் இருந்து மகா அலெக்சாந்தரிடம் கைமாறியது. பின்னர் கிரேக்கர்களிடம் வந்தது. கிரேக்கர்கள் அங்கு சிலைகளை வைத்தனர். அதனால் கிரேக்கர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. இக்காலகட்டத்தில் மீளவும் யூதர்கள் பலமான கிளர்ச்சியொன்றை மேற்கொண்டனர். கி.மு. 164 இல் ஜெரூசலத்தை மீட்டிக் கொண்டனர். 100 ஆண்டுகள் அவர்களது ஆட்சி நீடித்தது. பின்னர் மீளவும் ரோமர்கள் அந்நகரைக் கைப்பற்றி, இரண்டாவது கலீபா உமர் (ரழி) அவர்கள் நகரைக் கைப்பற்றும் வரை ரோமர்களின் ஆட்சி தொடர்ந்தது.

கன்ஆனை யூதர்கள் கைப்பற்றிய காலமெல்லாம் ஏனைய சமூகங்களின் புனிதங்களையும் அவர்கள் அழித்த வந்தனர். தாவூத் (அலை) இந்நகருக்கு நுழைந்ததிலிருந்து 3000 வருடங்களுக்கு முன்னர் கன்ஆனிய்யூன்களே அந்நகரை கட்டியெழுப்பியிருந்தனர்.

ஈஸா அலை அவர்களது தூதுத் துவத்திலிருந்தே யூதர்கள் கிறிஸ்தவர்களுடன் கடும் போக்குடன் நடந்துகொண்டனர். கி.பி. 4 நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர் யூதர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். கிறிஸ்தவர்களின் புனித பூமியாக ஈலிய்யா நகர் இருந்தது. அவர்கள் யூத தேவஸ்தானங்களை அழித்து, அவ்விடங்களை குப்பைகள், அழுக்குகள் குவிக்கப்படும் இடங்களாக மாற்றியமைத்தனர்.

எனவேதான் உமர் (ரழி), இந்நகரை வெற்றி கொண்டு, பொறுப்பேற்கச் சென்றவேளை யூதர்கள் எவரையும் அங்கு குடியேற்றுவதில்லை என உத்தரவாதமளிக்குமாறு கிறிஸ்தவர்கள் வேண்டினர். இதுவே இஸ்லாத்திற்கு முன்னரான பலஸ்தீனினதும் ஜெரூசலத்தினதும் வரலாறாகும்.
இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? வரலாற்றில் இன்றைய பலஸ்தீனிய அறபுகளுக்கு உள்ள உரிமை காலத்தாலும் பண்பாட்டுத் தொடர்ச்சியாலும் சமய அடையாளத்தாலும் மிகவும் தொன்மையானது. யூதர்கள் நவீன வந்தேறு குடிகளே. வரலாறு நெடுகிலும் அதன் ஆக்கிரமிப்பாளர்களாகவே அவர்கள் இருந்துள்ளனர். இன்றைய மேற்குக்கரை மீதான யூத விஸ்தரிப்பு வாதம் இந்த வரலாற்று உண்மைக்கு தெளிவான அத்தாட்சியாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s