கொழும்பு: இதுவரை காலமும் மிகவும் பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த ஆயுத களஞ்சியம் அவ்வளவு இலகுவில் வெடித்து சிதற எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்வில் இராணுவம் குழம்பியுள்ள நிலையில், இன்று மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பின் துறைமுகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி தேசமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட காரணம் என்ன? இயல்பாக நடைபெற்ற ஒன்றா அல்லது யாரெனும் ஒருவரின் தேவைக்காக இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவ மட்டத்தில் மிகவும் பலமான நபராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காணப்பட்டார். ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பயனாக அவர் இன்று கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமகாலத்தில் அதிகாரத்தில் இல்லாத போதும், அரச துறைகள் மட்டுமன்றி இராணுவ படைக்குள் மஹிந்த மற்றும் கோத்தபாவின் தீவிர விசுவாசிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அண்மைக்காலமாக கோத்தபாய கைது செய்யப்படுவார், அரசியலில் நுழையப் போகும் கோத்தபாய நாட்டை ஆட்சி செய்வார் என்பது தொடர்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டு வருகின்றன.
நாட்டின் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்க தன்னால் முடியும் என்ற கருத்தினை கோத்தபாய அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகள் கோத்தபாயவின் தேவைக்காக நடைபெறுகிறதா என்பது தொடர்பில் பல்வேறு மட்டத்திலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Published by


Leave a comment