50 பேரை சுட்ட மதீன் யார்?

omar_matheen-# மனநிலை சரியில்லாதவர் – முன்னாள் மனைவி ஒப்புதல்

# 29 வயதான உமர் மதீன், ஆப்கான் பெற்றோருக்கு, புளோரிடாவில் பிறந்த அமெரிக்கவாசி.

# 2013 மற்றும் 2014 இல் FBI இனால் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்

# தாக்குதலுக்கு முன்னர் அவசர தொலைபேசிக்கு (911) அழைத்து தீவிரவாத தொடர்பு உள்ளவர் என தெரிவித்துள்ளார்.

# பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஓலாண்டோ பிரதேசத்தின் ஓரின சேர்க்கையாளர்களின் விடுதி ஒன்றில் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவரால் நேற்று (12) நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டு 53 பேர் காயமடைந்தனர்.

குறித்த தாக்குதலை மேற்கொண்டிருந்தவர் உமர் மதீன் (Omar Mateen) எனும் அமெரிக்க பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தாக்குதலை இஸ்லாமிய தேச அமைப்பு ISIS உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்ஸ் நைட்கிளம் (Pulse Nighclub) எனப்படும் குறித்த இரவு விடுதி, ஒருபால் சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடும் ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடுதியினுள் புகுந்த 29 வயதான மதீன் அங்கிருந்தோர் மீது சராமரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

omar_matheen-

குறித்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதோடு, 53 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் ஒலாண்டோ பொலிஸாரால் கொல்லப்பட்டு, பணயமாக வைக்கப்பட்ட சுமார் 33 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனது முன்னாள் கணவர், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என அவரது முன்னாள் மனைவியான சிடோரா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த மதீன், கடந்த 2013 மற்றும் 2014 ஆகிய இரு தடவைகள், அமெரிக்க உளவுப் பிரிவினரால் (FBI) விசாரிக்கப்பட்டார்.

தான் ஒரு ஆயுத குழுக்களுக்கு ஆதரவானவன் எனும் கருத்தை, தனது சக ஊழியர்களிடம் தெரிவித்ததை அடுத்தே, குறித்த விசாரணைகளை FBI மேற்கொண்டிருந்தது. ஆயினும் அது குறித்தான போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், மதீன் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, குறித்த ஆயுத தாக்குதலை மேற்கொள்ள முன்னர் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு (911) அழைப்பை மேற்கொண்ட மதீன், தான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் எனத் தெரிவித்துள்ளார்.

IS அமைப்பு குறித்த தாக்குதலுக்கான உரிமையை கோரியுள்ள போதிலும், இது நேரடியாக தீவிரவாத குழுக்களுடன் தொடர்புபட்ட விடயமா அல்லது இவ்வாய்ப்பை பயன்படுத்த அவ்வமைப்பு முயற்சிக்கின்றதா என்பதில் சந்தேகம் நிலவுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இத்தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், கடந்த 25 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான தாக்குதல்களில் அதிக உயிர்களை பலி கொண்ட தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டில் செயுங் ஹுய் சொ எனும் மாணவன் 32 பேரை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமே அமெரிக்காவில், கடந்த 25 வருடத்தில் இடம்பெற்ற அதிக உயிர்கள் பலியான சம்பவமாக பதிவாகியுள்ளது.

Published by

Leave a comment