கசகசா பற்றிய பொய்ப் பிரச்சாரம்

  • JM. ஜெஸீம்

basilநோன்பு மாதம் வந்து விட்டாலே, முஸ்லிம்களாகிய நாம் குளிர்பானங்களோடு விரும்பிக் கலந்து குடிக்கும் “கசகசா” எனும் உணவுப் பதார்த்தத்தைப் பற்றிய அவதூறும் அவிழ்த்து விடப் படுவது வழக்கமாகி விட்டது. சென்ற வருடமும் இந்த அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. இதைப் பல சமூக ஊடகங்களும் பரப்பவும் செய்தன. இது ஒரு தப்பான பிரச்சாரம். இதைப் பரப்புகிறவர்கள் இதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

பரப்பப்படும் வதந்தி இது தான்:

கசகசா என்பது ஓபியம் எனப்படும் போதைப் பொருள் செடியின் விதையாகும். இதை நாம் ரமழான் காலங்களில் உட்கொள்வதன் மூலம் நம்மையறியாமலேயே போதைப் பொருள் பாவனையெனும் ஒரு பாவத்தைச் செய்கிறோம். எனவே கசகசா உட்கொள்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சாரம் எந்த அளவுக்கு உண்மையானது என்பதைப் பார்க்கலாம்:

இவர்கள் கூறுவது போல், கசகசா என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் உணவுப் பதார்த்தம் உண்மையில் போதைப்பொருள் அல்ல. இது ஓபியம் செடியின் விதையும் அல்ல.

ஓபியம் செடியின் விதைக்கு உலகில் பல்வேறு நாடுகளில் “கசகசா” என்ற பெயர் தான் வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தக் குழப்பம்.

basil

உண்மையில் நாம் உட்கொள்வது இந்த கசகசா அல்ல. “கசகசா” என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் விதையின் சரியான பெயர் கசகசா அல்ல; “ஸப்ஜா” என்பது தான் இதன் பெயர். இதை ஆங்கிலத்தில் Sweet Basil Seeds என்று அழைப்பார்கள். இது உண்மையில் ஒரு மருந்துச் செடி. துளசி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரத்தின் விதையைத் தான் நாம் குளிர்பானங்களில் கலந்து பருகுகிறோம். இது முற்றிலும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு மருத்துவக் குணம் கொண்ட, முற்றிலும் ஹலாலான ஓர் உணவுப் பதார்த்தமாகும்.

போதை வஸ்த்துவின் விதைக்கு வழங்கப் படக்கூடிய “கசகசா” என்ற பெயரைத் தவறுதலாக நாம் எமது வழக்கத்தில் இந்த ஹலாலான உணவுப் பதார்த்தத்துக்கு வழங்கி வருகிறோம். இந்தத் தவறான புரிதலை வைத்து சிலர் இந்த ஹலாலான உணவுப் பதார்த்தத்தை ஹராமாக்கப் பார்க்கிறார்கள்.

உஷார்…!! யார் சொல்வதையும் எடுத்த எடுப்பில் நம்பி விட வேண்டாம். தீர விசாரியுங்கள்.

– அபூ மலிக்

Published by

Leave a comment