முகமது அலி: “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை நான் அணிய விரும்பவில்லை”

  • AF-90

muhammad-aliநியுயோர்க்: 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தார் கோசியஸ் மார்செலஸ் கிளே என்பதுதான் முகமது அலியின் இயற்பெயர். சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் செல்லாமல் பேருந்துடன் ஓடியே முகமது அலி பள்ளிக்கு செல்வாராம். முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்ததிலேயே ஊறியிருந்தது. அலியின் 12வது வயதில் அவரது சைக்கிளை ஒருவன் திருட முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்தி சாய்த்தார். அவரது குத்துச்சண்டை வாழ்க்கை அப்போதே தொடங்கிவிட்டது. முகமது அலி விட்ட குத்துக்களைப் பார்த்த ஜோ மார்டின் என்ற ஒரு போலீஸ்காரர் அலியை குத்துச்சண்டையின் பக்கம் திசை திருப்பி அவரே பயிற்சியாளராகவும் இருந்தார்.

1960ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முகமது அலி, அதே ஆண்டில் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார். பின்னர் களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிக் காற்று முகமது அலி பக்கமே வீசியது.

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக 19 குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றிபெற்ற முகமது அலிக்கு 20ஆவது போட்டி, உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் அவருக்கு எதிராக அப்போதைய உலக ஹெவிவெயிட் சம்பியனான சோனி லிஸ்டன் களமிறங்கினார். அன்றைய காலகட்டத்தில் உலகின் மிக ஆபத்தான வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டனை 22 வயதே ஆன முகமது அலி 1964-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி எதிர்கொண்டார்.

இப்போட்டியின் 7வது சுற்றில் ‘டெக்னிக்கல் நொக்-அவுட்’ முறையில் வெற்றி பெற்ற முகமது அலி, உலக சம்பியன் ஷிப் பட்டம் வென்றார். இதன் பின்னர் 1965ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற மறு போட்டியிலும் முதல் ரவுண்டிலேயே ஒரே குத்தில் சோனி லிஸ்டனை முகமது அலி நொக்-அவுட் செய்தார். அதிரடி பஞ்ச்களினால் எதிராளியை நாக் அவுட் செய்தாலும் முகமது அலி இளகிய மனம் கொண்ட மனிதாபிமானி.

1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சுகர் ரே ரொபின்சனிடம் ஓட்டோகிராப் வாங்கச் சென்றுள்ளார் அலி. ஆனால் அவரோ இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று கோபமாகக் மறுத்துவிட்டார். இதனால் மனம் நொந்து போன அலி. தன்னைப் போல எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று கருதிய அலி யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

1960ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டி முடிந்த நாட்டிற்குத் திரும்பிய அலி, நான் இந்நாட்டிற்காக தங்கப் பதக்கம் வாங்கி வந்துள்ளேன். நான் இப்போது ஹோட்டலில் உணவு சாப்பிட போவேன் என கூறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று கோப்பி கேட்டுள்ளார். அமெரிக்காவில் இனபேதம் தலைவிரித்தாடிய நேரம் அது என்பதால், கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை என அங்கு பணியில் இருந்த பெண் முகத்தில் அடித்தது போல பதில் அளித்தார்.

muhammad-ali
yourkattankudy/mohamed -ali

இதனால், கடும் கோபமடைந்த முகமது அலி, தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியெறிந்ததாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை நான் அணிய விரும்பவில்லை என்றும் முகமது அலி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில், அமெரிக்க படையினருக்காகப் போரிட முகமது அலி மறுத்தார். பலமுறை எச்சரிக்கப்பட்டும், போர் என்பது தனது மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி மறுத்தார் அலி. இதனால் அவரது ஹெவி வெயிட் பட்டம் பறிக்கப்பட்டது. குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் அவருக்குத் தடை விதித்தன. வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத வகையில் அவரது பாஸ்போர்ட்டும் பறிக்கப்பட்டது.

ஆனாலும் தனது நிலைப்பாட்டிலிருந்து சற்றும் மாறாமல் சுமார் 42 மாதங்கள் தான் நேசித்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். சுமார் மூன்றரை ஆண்டு காலம் குத்துச்சண்டடை பக்கமே தலை வைத்து படுக்காமல் வைராக்கியமாக இருந்து காட்டினார் அலி. பின்னர் களம் கண்ட பிறகு முகமது அலியிடம் சற்றும் வேகம் குறையவில்லை.

குத்துச்சண்டையின் போது, பலமுறை தலையில் அடிபட்டதால் முகமது அலிக்கு தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது. கடந்த 2013ல் கடும் உடல்நலைக் குறைவால் பாதிக்கப்பட்ட அலி ஓரிரு மாதங்கள் கூட தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கூற அதையும் தாண்டி வந்தார் அலி. விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை.

அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு தொலைநோக்கு ஆழமான விருப்பம் இருக்க வேண்டும்’. சந்தகமே வேண்டாம்; இதை சொன்னவர் முகமது அலி தான். அவர் அப்படித் தான் சாதித்தார் வாழ்ந்து கட்டினார். காசியஸ் மார்செலஸ் கிளே என்பதே அவரது இயற்பெயர். பிற்காலத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி முகமது அலியாக மாறினார். 61 முறை ஹெவி வெய்ட் குத்துச் சண்டை போட்டிகளில் களமிறங்கியிருக்கிறார். அதில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் 37 முறை நொக்அவுட் முறையில் முகமது அலி வென்றுள்ளார். தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்தர் முகமது அலி. வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார்.

1981ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தார். உடல்நலிவுற்ற போதிலும் கறுப்பர்களின் உரிமைகளுக்காக ஈடுபடுவது சமூக சேவையில் இறங்குவது என தனது அந்திம காலத்தையும் தன் குத்துச்சண்டை நாட்களுக்கு இணையாக பரபரப்பாகவே கழித்து வந்தார் முகமது அலி. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு. சிறுநீரகக் கோளாறு, என பல நோய்கள் அலியை வதைத்தன. மரணத்துடன் நடந்த குத்துச்சண்டை போட்டியில் அவர் மரணத்தை பலமுறை நொக் அவுட் செய்தார். இறுதியில் மரணம் தனது வெற்றியை ருசித்து விட்டது.

Published by

Leave a comment