வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்குத் தேவையான அந்த கட்சிப்பிரதிநிதிகளின் ஆதரவு தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து தான் பெருமையடைவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அந்த கட்சியின் மாநாடு ஜூலை மாதம் நடக்கும்போது இவரது நியமனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
குடியரசுக்கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டுமானால் அந்த கட்சியைச் சேர்ந்த 1238 இதற்கான சிறப்புரிமை பெற்ற கட்சிப்பிரதிநிதிகள் அவரை ஆதரிக்க வேண்டும். அந்த அளவு பிரதிநிதிகளின் ஆதரவு டொனால்ட் ட்ரம்புக்கு கிடைத்துவிட்டதாக இருவேறு செய்தி நிறுவனங்கள் (அசோசியேட்டர் பிரஸ் மற்றும் என்பிசி நியூஸ்) செய்தி வெளியிட்டிருந்தன. இதன் மூலம் அவர் குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராவது உறுதியாகியிருப்பதாகவும் அவை தெரிவித்திருந்தன.
அந்த செய்திகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவை நினைத்துப் பெருமைப்படுவதாக இன்று வியாழனன்று தெரிவித்தார்.
இதுவரை யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்யாமலிருந்த சிறு எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சியின் சிறப்புப்பிரதிநிதிகள் தற்போது தாங்கள் டொனால்ட் ட்ரம்பை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அவருக்குத் தேவையான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
Published by

Leave a comment