லண்டன்: மார்பக புற்றுநோயைத்தோற்றுவிக்கும் மரபணு மாற்றங்கள் குறித்து மிகத்துல்லியமான தகவல்களை தாங்கள் கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். நேச்சர் என்னும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆய்வின் முடிவுகள் புற்றுநோய் ஆய்வில் முக்கிய மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நோய்க்கான புதிய சிகிச்சை வழிகளையும் இந்த நோயே வராமல் தடுப்பதற்கான சாத்தியங்களையும் இது உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
கேம்பிரிட்ஜில் இருக்கும் சாங்கர் இன்ஸ்ட்டியூட்டின் சர்வதேச விஞ்ஞானிகள் 560 மார்பக புற்றுநோயாளிகளின் மரபணுக்களின் அடிப்படை அலகான முந்நூறு கோடி மரபெழுத்துருக்களை விரிவாக ஆராய்ந்தார்கள். அதன் மூலம் புற்றுநோய் தோன்றும்போது மனித மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை புரிந்துகொண்டார்கள்.
“செல்களின் மாற்றங்கள் ஏன் புற்றுநோயாக மாறுகிறது என்பது குறித்து முழுமையான தகவல்களை சேகரித்தோம். அதிலிருந்து ஒரு செல் ஏன் புற்றுநோய் செல்லாகிறது என்பது விளங்கியது. அந்த புரிதல் மூலம் புற்றுநோயின் தோற்றத்தின் காரணங்கள் விளங்குகின்றன. அதைக்கொண்டு சிகிச்சையை மேம்படுத்த வழி பிறக்கிறது”, என்கிறார் சங்கர் இன்ஸ்டிடியூட் வெல்கம் ட்ரஸ்ட்டைச் சேர்ந்த மருத்துவர் செரெனா நிக் சைனல்.
இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட சிகிச்சையளிக்க வழி பிறக்கிறது. ஹெர்செப்டின் போன்ற மருந்துகள் மூலம் ஏற்கனவே சில சிகிச்சைகளில் இது சாத்தியமாகியிருக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் அதை மிகப்பெரிய அளவில் வளர்க்கும் என்கிறார்கள் நிபுணர்கள். புற்றுநோயைத் துல்லியமாக புரிந்துகொள்ள உதவியுள்ள இந்த ஆய்வு, புற்றுநோயே ஏற்படாமல் தடுக்கும் வழியையும் சாத்தியமாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
Published by


Leave a comment