பயணிகள் கவனத்திற்கு

Bus driverஇன்றைய நாள் முழுவதும்
நானொரு
தனியார்
பயணிகள் பேரூந்தாகியிருந்தேன்
00
எனது சிறு நகரத்திலிருந்து
பெறு நகரமொன்றிற்கான
எனது பயணத்தை
சாரதி பொறுப்பேற்றுக் கொண்டதும்
நான் பறக்கலானேன்
00
வீங்கிப் புடைத்த
என் வயிற்றுக்குள்ளிருந்து
இளசு, கிழம், குஞ்சுகுராலென பேதமின்றி
எல்லோரும்
அழுங்கிக் குலுங்குவதை
என்னால் உணர முடிகிறது
00
நான்
இன்னுமின்னும் பறக்கின்றேன்
00
பாவம் என்னைப் போலோருவன்
அவன் ஓடுவதும்
ஓய்வதும்
ஊர்ந்து செல்வதுமென விரைகின்றான்
இப்படிச் செல்லும்
அவனொரு
அரச பயணிகள் பேரூந்து என்பதை
எனது சாரதியின் நக்கல் சிரிப்பு
எனக்கு அடையாளம் சொன்னது
00
இதற்கிடையில்
யாரோ ஒரு பயணி
“ஸ்டேரிங்க கையில பிடிச்சா
இவனுக்கெல்லாம்
பிளேட் ஓட்டுற எண்டு நெனப்பு
நாசமாப் போவான்
மனிசன கொல்லக் கொண்டுபோறான்” என்பதாக
முணுமுணுத்துக் கொண்டிருந்ததை
காற்று அள்ளிவந்து
என்காதில் போட தவறவில்லை
00
இன்னும்
எனது பறத்தலின் இடையில்
பச்சத்தண்ணி ஹோட்டலில்
ஓசிச் சோறும்
சாரதியின் வயிற்றை
நலம் விசாரித்துக்கொண்டது
பாவம் பயணிகள்
அவர்களுக்குத்தான்
ஒன்னுக்கு போகக்கூட
ஒழுங்கான
ஒரு மலசலகூடம் கூட கிடைக்கவில்லை
00
இன்னும் நான்
வேக வேகமாக பயனிகின்றேன்
எனக்கு யாரும் ஏசாதீர்கள்
நடத்துனரையும் சாரதியையும் தவிர
வாயில்லாப் பூச்சி என்னால்
என்னதான் செய்ய முடியும்
00
இன்னும்
தூரம் மீதமிருக்கிறது
நான் அந்த பெறுநகரத்தை
அடைந்தேனா என்பதை தெரிந்துகொள்ள
நாளைக் காலையில்
நீங்களொரு தினசரிப் பத்திரிகையை
பார்க்கத்தான் வேண்டும்

– பிரகாசக்கவி

Published by

Leave a comment