நமது உடமைகளை நாமே பாதுகாப்போம்

  • முஹம்மது நியாஸ்

Lockதினந்தோறும் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களில் மூடிவிட்டு வீடு செல்லும்போது அன்றையதினம் உள்வந்த பணத்தையும் பெறுமதியான சிறிய பொருள்களையும் கையோடு வீடுகளுக்கே எடுத்துச்செல்வது ஒரு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாகும்.

இவ்வாறு செய்கின்றபோது வழிப்பறிக்கொள்ளைக்கு பயந்தால் வர்த்தக நிலையங்களிலேயே தேவைக்கேற்ற அளவில் பாதுகாப்பு அலுமாரியொன்றை (Safe) வைத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எக்காரணம் கொண்டும் பணத்தையோ இலகுவாக கவர்ந்து செல்லக்கூடிய பெறுமதியான சிறிய பொருட்களையோ இரவுவேளைகளில் கடைகளுக்குள் வைத்துவிட்டுச்செல்ல வேண்டாம் என்பது காவல்துறையின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

ஆனாலும் அதிகமான வர்த்தகர்கள் இவ்வாறு செய்வதில்லை. மாறாக வெறுமனே கதவில் தொங்கிக்கொண்டிருக்கும் மூன்று, நான்கு பூட்டுக்களை மாத்திரமே நம்பி பல லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணத்தையும் பொருள்களையும் வீதியோரங்களில் விட்டுச்செல்கின்றனர்.

தற்கால சூழலில் தொழில்(?) புரிகின்ற திருடர்களுக்கு கதவில் தொங்குகின்ற பூட்டுக்களை உடைப்பதென்பது ஒரு சவாலே இல்லை. எவ்வளவோ நுணுக்கமான தொழிநுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பூட்டுக்களைக்குட ஓரிரு நொடிகளில் மிகச்சாதாரணமாக உடைத்தெறிந்துவிட்டு ஒட்டுமொத்த வர்த்தக நிலையத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு போன வரலாற்றுச்சம்பவங்களையும் நாம் சந்திக்கத்தவறவில்லை.

மேலும் தற்போது கண்காணிப்பு கமராக்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. அவ்வாறான “நைட் விஷன்”( Night vision) தொழிநுட்பத்துடன் கூடிய கண்காணிப்புக்கமராக்களை வர்த்தக நிலைய சுற்றுச்சூழல்களில் பொருத்துவதனூடாகவும் இவ்வாறான வேண்டத்தகாத சம்பவங்களை குறைக்கமுடியும்.

கொலைகாரர்களை, கொள்ளையர்களை தேடிப்பிடிப்பதில் நமது நாட்டின் காவல்துறையினருடைய திறமை காலாதிகாலமாக நாமறிந்த ஒன்றுதான்.

பல லட்சக்கணக்கான பணத்தையும் பொருட்களையும் கொள்ளையர்களிடம் பறிகொடுத்துவிட்டு அதை முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்குச்சென்ற அந்த பாவப்பட்ட வர்த்தகனிடமே மேலும் “புடுங்கித்தின்னுகின்ற” நம்நாட்டு காவல்த்துறையின் நாகரீகமான(?) வரலாறுகளும் நாம் அறியாத ஒன்றல்ல.

எனவே நமது சொத்துக்கள், உடமைகளுக்கு முதலாவது பாதுகாப்பு அதிகாரிகள் நாமாகவே இருக்கவேண்டும். நமது உடமைகளை பாதுகாப்பதற்காக நாமே அதிகபட்சமான பிரயத்தனத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை மனதார உணர்ந்து செயற்படுவோம்

Published by

Leave a comment