- பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி கல்விக் கோட்டப் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், சுவடு சிறப்பு மலர் வெளியீடும் நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ஜெஸீமா முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி,சவுதி அரேபிய பிரபல சட்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் , சவூதி அரேபிய பிரபல அறிஞர் கலாநிதி அய்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் இருந்து கல்வித்; துறையில் சாதனை படைத்த மற்றும் தற்போது சாதனை படைத்துவரும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு கற்பித்த அதிபர்,ஆசிரியர்கள் ஆகியோரும் கிண்ணமும் ,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கல்விச் சேவையை பாராட்டி அவருக்கு மில்லத் மகளிர் மகா வித்தியாலய நிருவாகம் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது.
இங்கு மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் 2016 பரிசளிப்பு விழாவின் சுவடு சிறப்பு மலரும் அதன் அதிபர் திருமதி.ஜெஸீமா முஸம்மிலினால் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வெளயீட்டு வைக்கப்பட்டதுடன் அதன் மலர் விமர்சன உரையை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும்,பன்னுலாசிரியருமான எம்.எம்.எம்.மஹ்ரூப் கரீம் வழங்கினார்.
இதில் மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ் வருடாந்த பரிசளிப்பு விழாவில் காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,கல்வியலாளர்கள்,புத்திஜீவிகள்,ஊர் பிரமுகர்கள், மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள்,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment