கொழும்பு: நாடு தழுவிய அளவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது ஒரு நாசகாரச் செயற்படாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள், இரண்டு தடவை நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் நாடு முழுவதிலும் இப்படியானதொரு மின் தடை ஏற்பட்டதில்லை என்று தெரிவித்த அமைச்சர், இது வழமைக்கு மாறான ஒரு சம்பவம் என்றும் கூறினார்.
இதனால் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு அப்பால் நாசகார செயல் ஏதேனும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் தொழில்நுட்ப விசாரணைகளையடுத்தே இது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் எனவும் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இதனிடையே இந்த மின்சாரத் தடைக் காரணமாக நுரைச்சோலை மின் நிலையத்திலுள்ள மூன்று இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவித்த அவர், அதனை சரி செய்ய குறைந்தது மூன்று நாட்கள் பிடிக்கும் எனவும் கூறினார். மின்சார விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக பொறியியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
Leave a comment