ஜித்தா: இம்முறை புனித ஹஜ் கோட்டா அதிகரிப்பதற்கான இணக்கப்பாடு கிட்டியுள்ளதாகவும் கடந்த வருடம் 2800 பேர் அளவில் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றதாகவும் இம்முறை சுமார் 4500 பேர் அளவில் ஹஜ் செல்வதற்கான ஹஜ் கோட்டா கிடைக்கபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ள முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அங்கிருந்து தெரிவித்தார்.
சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு இவ்வருடம் ஹஜ் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையிலான குழு கடந்த 02-.03-.2016 ஆம் திகதி அங்கு விஜயம் மேற் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள புனித ஹஜ் யாத்திரையை சிரமங்களின்றி கூடிய வசதி வாய்ப்புக்களுடன் மேற் கொள்வதற்கு ஒழுங்கள் செய்து தரப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட ஹஜ்ஜாஜிகளின் நலன் சார் விடயங்கள் சவுதி அரேபியா ஹஜ் துறைசார் அமைச்சர் கலாநிதி பந்தர் பின் முஹமட் அல் ஹஜ்ஜார் மற்றும் அதிகாரிகளுடன் அங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுவில் இராஜங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌசி, ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி சியாட் தாஹா, ஹஜ் முகவர் அமைப்பின் தலைவர் பாரூக் ஹாஜியார் மற்றும் அமைச்சரின் இணைப்பதிகாரி ரமீம் ஆகியோர் அங்கம் பெறுகின்றனர். இந்தச் சந்திப்பின் போது சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாஸீமும் கலந்து கொண்டார். அத்துடன் இவர்கள் உம்ராக் கடமையையும் நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பவுள்ளனர்.
Leave a comment