கொழும்பு: எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனப் பரவிய வதந்தியால், தனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கல்வி அமைச்சர், குளியாப்பிட்டிய வலயக் கல்வி பணிப்பாளர், குளியாப்பிட்டியவிலுள்ள இரண்டு பள்ளிக்கூடங்களின் அதிபர்கள் உட்பட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பள்ளியில் பயில அனைத்து தகமைகளும் இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குளியாப்பிட்டியவிலுள்ள இரண்டு பள்ளிக்கூடங்களின் அதிபர்கள், தனது மகனை பள்ளியில் சேர்ப்பதற்கு மறுத்துள்ளனர் எனவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். தனது மகனின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் மனுமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனுக்கு, எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகக் கூறி பரவிய வதந்தியினால் அந்த சிறுவனை தமது பள்ளியில் அனுமதிப்பதை அப்பகுதி பள்ளிக்கூடங்கள் தவிர்த்து வந்தன.

தனது மகனின் கல்வி உரிமை மறுக்கபட்டதற்கு எதிராக போராடிய அவரது தயார், சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பதை மருத்து ரீதியாக உறுதிப்படுத்தினார். இதையடுத்து கல்வி அமைச்சின் அதிகாரிகளின் தலையீட்டில், குளியாப்பிட்டியவிலுள்ள ஒரு பள்ளிகூடத்தில் சிறுவன் கல்வி பயில அனுமதிக்கபட்டதுடன், இதற்கு மற்றைய மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் தமது பிள்ளைகளை சில நாட்கள் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்தனால், பள்ளிக்கூடத்தை ஓரிரு தினங்களுக்கு மூட வேண்டிய சூழ்நிலை பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய பள்ளிக்கூட நிர்வாகம் கல்வி அமைச்சக அதிகாரிகளின் உதவியை நாடிய நிலையில், பள்ளிக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சின் அதிகாரிகள், மருத்துவர்கள், மனித உரிமை ஆணைக் குழு அதிகாரிகள் என பலர் சிறுவனுக்கு எந்த நோயும் இல்லை என்பது தொடர்பில் பெற்றோருக்கு விளக்கமளித்தனர்.ஆனால், இந்த சிறுவன் பள்ளியில் இருக்கக்கூடாது என மற்றைய பெற்றோர் வாதிட்டதையடுத்து, அந்த மாகாணத்திற்கு பொறுப்பான கல்வி அமைச்சர் சிறுவனை பள்ளியிலிருந்து நீக்கிக்கொள்வதாக அறிவித்தார்.

எனினும் சிறுவனின் ஆவண அடையாளங்களை மாற்றி, வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.இதன் பின்னணியிலேயே சிறுவனின் தாயார் தற்போது அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்குதல் செய்துள்ளார்.
Leave a comment