லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கூடிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜூன் 23-ம் திகதி நடக்கும் என்று பிரதமர் டேவிட் கமரன் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் காணப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் பற்றி ஆராயும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை உடன்பட்டுள்ளதாக கமரன் கூறியுள்ளார்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என்பதை திருப்திப்படுத்தும் அளவுக்கு இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று அவரது அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்களும் கருதுவதால் அவர்கள், பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரிட்டன் தொடர்ந்தும் தனது சொந்த நாணயமான பவுண்டை நிரந்தரமாகப் பயன்படுத்தவும் ஐரோப்பாவுடன் மேலும் அரசியல் நெருக்கத்தை ஏற்படுத்தாமல் வெளியில் இருக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோருக்கு பிரிட்டனின் சமூக நலத்திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
Leave a comment