- முஹம்மது நியாஸ்
அப்துர் றஊப் மௌலவியும் அவரைச்சார்ந்த உலமாக்களும் பிரச்சாரம் செய்து வருகின்ற அத்வைத சித்தாந்தங்கள் மற்றும் அவை சார்ந்த வழிகேடுகளுக்கு எதிராக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிகத்தீவிரமாக நான் பிரச்சாரம் செய்து வருவதை தமிழ்பேசும் ஏகத்துவ சமூகமே நன்கறியும். ஆனாலும் ஒரு காலக்கட்டத்தில் நான் அப்துர் றஊப் மௌலவியுடைய தீவிர ஆதரவாளனாக இருந்துவந்தேன் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம், அதுதான் உண்மை. 1996ம் ஆண்டு பாடசாலையில் கல்வி கற்கும்போது என்னுடைய பதினான்கு வயது தொடக்கம் நான் அப்துர் றஊப் மௌலவியுடைய மிகத்தீவிரமான ஆதரவாளனாகவும் அவர்மீது அளவு கடந்த மரியாதையும் பக்தியும் கொண்ட ஒரு விசுவாசியாகவும் இருந்து வந்துள்ளேன்.
புதிய காத்தான்குடி-03, மீன்பிடி இலாகா வீதியில் கடற்கரையை அண்மித்த எனது வீட்டில் இருந்து ஐந்து நேரத்தொழுகைகளையும் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் பயணித்து பதுறிய்யாவுக்கே சென்று நிறைவேற்றிவந்தேன். வெள்ளிகிழமைகளில் குத்பா உரை தொடங்குவதற்கு 15நிமிடங்கள் முன்பதாகவே சென்று அப்துர் றஊப் மௌலவி வந்து வழமையாக அமரக்கூடிய புஹாரி மண்டபத்தில் உள்ள ஒரு இடத்துக்கருகே இடம்பிடித்து அமர்ந்துவிடுவேன்.
அந்த நாட்களில் குத்பா உரைகளை மர்ஹூம் மௌலவி MSM. பாறூக் (காதிரி)தான் நிகழ்த்துவது வழமையாக இருந்தது. பாறூக் மௌலவியுடைய குத்பா என்றால் ஒரு அலாதியான ஆர்வம். காரணம், அவருடைய உரைகளில் ஹமவோஸ்த் கொள்கையினை அக்குவேர்ஆணிவேராக விளக்குவார். மேலும் அப்போது அத்வைத கருத்துக்களுக்கு எதிராக எதிர்த்தரப்பு உலமாக்கள் கொண்டிருந்த கனதியான மௌனத்தை மிகவும் காரசாரமான வார்த்தைகளால் விமர்சிப்பார்.
சுருக்கமாக சொல்லப்போனால் அத்வைதம் தொடர்பாக அப்துர் றஊப் மௌலவி தரப்பில் கிடைத்த நியாயவாத விளக்கங்களை விடவும் அந்த கருத்துக்களுக்கு எதிராக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா என்னும் பொறுப்புமிக்க அமைப்பிலுள்ள மூத்த உலமாக்கள் கொண்டிருந்த நிரந்தர மௌனமே என்னை அத்வைத வழிகேட்டின்பால் மிகவும் உறுதியாக இட்டுச்சென்றது.

ஜும்ஆ தொழுகை முடிந்ததும் அப்துர் றஊப் மௌலவி சிறப்புரை நிகழ்த்துவார். அது பெரும்பாலும் அவுலியாக்கள் தொடர்பாக அவர் இப்போதும் கூறிவருவது போன்ற இதிகாசங்களாகவே அமையப்பெற்றிருக்கும். அவ்வப்போது அத்வைதம் தொடர்பாக விளக்குவார். அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகவும் கவனமாக காதுதாழ்த்திகேட்பேன்.
அப்துர் றஊப் மௌலவி தன்னுடைய கருத்துக்களை நிறுவவதற்காக மேற்கோள் காட்டுகின்ற குர்ஆன் வசனங்களையும் நபிகளார் கூறியதாக அவர் கூறுகின்ற ஹதீஸ்களையும் ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக்கொள்வேன். ஆனால் துரதிர்ஷ்டம், அவற்றை சரியா பிழையா என்று சரி பார்ப்பதற்கு அப்போது ஒரு துறைசார் அறிஞர் எனக்குக்கிடைக்கவில்லை. நல்லறிவை தேடிக்கற்பதற்கு இப்போதிருப்பது போன்று இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் அப்போது இருக்கவில்லை.
மாறாக ஜம்இய்யதுல் உலமா என்றொரு மௌனமான சபையையே மக்கள் நம்பியிருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிர்பந்த நிலை காணப்பட்டது.
அதேநேரம் எனது வீட்டுக்கு அருகில் இருந்த எங்களுடைய மஹல்லா பள்ளிவாயிலான பரீட் நகரில் அமைந்திருக்கக்கூடிய மஸ்ஜிதுல் மனாருல் ஹுதா பள்ளிவாயிலில் வருடா வருடம் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் ஸுப்ஹான மௌலீது ஓதப்படும். நான் அப்பள்ளிவாயிலின் குர்ஆன் மதரஸாவில் மிகவும் சிறு வயதிலேயே அல் குர்ஆனை முழுவதுமாக ஒதிமுடித்துவிட்டேன். பின்னர் ஸுப்ஹான மௌலீது, பத்ரு மௌலீது மற்றும் தலைப்பாத்திஹா என்பவற்றையும் கற்று முடித்து விட்டபடியாலும் மௌலீதுகளை மிகவும் அழகாக இராகமமைத்து மெட்டிசைத்து ஒதுவதனாலும் பள்ளிவாயிலில் நடைபெறுகின்ற மௌலீது சபைகளில் எனக்கு எப்போதுமே முன்வரிசையில் உலமாக்களுக்கு அருகில் பிரத்தியேகமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு நாட்கள் கடந்து கொண்டிருகின்றபோது சில சந்தர்ப்பங்களில் “நபிகளாரிடம் நாம் நேரடியாக உதவி தேடலாமா” என்றொரு சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. அப்போது அந்த சந்தேகத்தை மர்ஹூம் பாறூக் மௌலவியிடத்தில் நான் கேட்டபோது அவர் அளித்த பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“நீ வருடா வருடம் அரபியில் ஓதுகின்ற ஸுப்ஹான மௌலீதுடைய தமிழ் விளக்கம் உனக்குத்தெரியுமா” என்று கேட்டார். நான் “இல்லை” என்றேன். அவர் உடனே ஸுப்ஹான மௌலீதில் “குல்லுஷ்ஷுரூரி” என்று ஆரம்பிக்கக்கூடிய மௌலீதுடைய சில இடைவரிகளை பாடிவிட்டு அதனுடைய அர்த்தத்தை விளக்கினார். அப்போது மௌலீதுக்கிதாபுகளை அழ்ழாஹ்வின் வேதத்திற்கு ஒப்பானதாகக்கருதிய எனக்கு அந்த பாடலுடைய அர்த்தம் நபிகளாரிடம் நேரடியாக பிரார்த்திப்பதில் தவறே இல்லை என்பதை சந்தேகமற நிரூபித்தது.
பாறூக் மௌலவி மேலும் ஒரு கேள்வி என்னிடம் கேட்டார். “நபிகளாரிடம் நாம் நேரடியாக கேட்பதை வஹாபிகள் கூடாதென்கிறார்கள் என்றால் அரபு மொழிதெரிந்த அந்த வஹாபிகள் ஏன் உன்னோடு உக்கார்ந்துகொண்டு இந்த மௌலீதை உற்சாகமாக பாடுகிறார்கள்” என்பதே அவருடைய கேள்வியும் வாதமுமாக இருந்தது.
அப்போதைய சூழலில் இது மிகப்பாரியதொரு நியாயவாதமாக எனக்கு தென்பட்டதுடன் என்னுடைய உள்ளத்தில் அது ஒரு பசு மரத்தாணியாக பதிந்தும் விட்டது.
ஒட்டுமொத்தத்தில் அப்துர் றஊப் மௌலவி தமிழில் பிரச்சாரம் செய்து வந்த இணைவைப்பு தொடர்பான அனைத்து சித்தாந்தங்களையும் சாஸ்த்திரங்களையும் ஜம்இய்யதுல் உலமாவை சேர்ந்த மூத்த உலமாக்களே அரபு மொழியில் மௌலீதுகளாக பாடிவந்ததன் மூலம் அவர்களும் அந்த வழிகேடுகளை சரிகண்டுதான் வந்துள்ளார்கள் என்பது எனக்கு தெளிவாக நிரூபணமானது. அதன் காரணமாகத்தான் அப்துர் றஊப் மௌலவியுடன் இந்த உலமாக்கள் யாருமே நேரடி விவாதத்திற்கு வரமுடியாமல் மௌனமாக இருக்கிறார்கள் என்ற உண்மையும் அன்றே புலப்பட்டுவிட்டது.
பின்னர் 1998ம் ஆண்டு நான் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதிவிட்டு தொழில் நோக்கத்திற்காக கண்டி நகருக்கு சென்றேன். கண்டியில் நான் இருந்த சூழல் அப்துர் றஊப் மௌலவியுடைய கருத்துக்கள் மீது எனக்குள் தர்க்கரீதியான சில கேள்விகளை எழுப்பியது.
மௌலவி P. ஜைனுல்லாபிதீன், கோவை S. அய்யூப் மற்றும் மௌலவி SHM. இஸ்மாயில் (ஸலபி) போன்றவர்களுடைய சொற்பொழிவுகளை சீடீக்கள் வாயிலாக அடிக்கடி கேட்கக்கூடிய, பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இஸ்லாமிய அகீதா தொடர்பாக அந்த அறிஞர் பெருமக்கள் ஆற்றிய உரைகள் வாயிலாக ஒரு குழப்பகரமான மனோநிலைக்கு தள்ளப்பட்டேன்.
அதன்காரணமாக அப்துர் றஊப் மௌலவிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தில் அத்வைதம் மற்றும் அவுலியாக்கள் பற்றிய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தெளிவைக்கேட்டு Foolscap தாளில் இரண்டு பக்கங்களில் ஒரு கடிதத்தை எழுதினேன். அக்கடிதத்திற்கு அப்துர் றஊப் மௌலவி எனக்களித்த பதிலே இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள கடிதமாகும்.
அக்கடிதத்தோடு “சஞ்சயம் நீக்கும் சஞ்சீவி” என்னும் பெயரில் அப்துர் றஊப் மௌலவி எழுதிய ஒரு புத்தகமும் இலவசமாக கிடைக்கப்பெற்றேன். இறைவன் எனக்கு அந்த சந்தர்ப்பத்தில்தான் நேர்வழியை நாடியிருக்க வேண்டும் என்று இப்போதும் நான் நம்புகிறேன். அப்புத்தகத்தை வாசித்தபோது அதில் அழ்ழாஹ்வுடைய வேதத்திற்கும் அண்ணலாரின் போதனைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை அவுலியாக்கள் என்று கருதிய நபர்களுக்கு கொடுப்பட்டிருந்ததை கண்டு அத்தனை காலமும் அத்வைத நம்பிக்கையிலும் இன்னபிற வழிகேடுகளிலும் மூழ்கிக்கிடந்த என்னுடைய உள்ளம் திறந்தது.
குறித்த அப்புத்தகம் என்னுடைய எதிர்பார்ப்பையும் என்னுடைய உள்ளத்தில் எழுந்த சந்தேகத்தையும் நிவர்த்தி செய்யும் அளவுக்கு பெறுமானத்தை கொண்டிராத காரணத்தினால் அப்துர் றஊப் மௌலவியை நேரில் சந்திப்பது என்று முடிவெடுத்து கரீப் நவாஸ் பவுண்டேஷன் காரியாலயத்திற்கு சென்றேன். அங்கிருந்த மௌலவி இப்ராஹீம் (நத்வி) இடம் என்னுடைய தேவைப்பட்டையும் சந்தேகத்தையும் கூறினேன். அவர் ஆரம்பத்தில் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் என்னுடைய தொந்தரவு தாழாமல் இரண்டு நாட்களின் பின்னர் நேரம் எடுத்துத்தருகிறேன் என்று கூறினார்.
வாக்களித்தபடியே இரண்டு நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் அப்துர் றஊப் மௌலவியுடைய அலுவலத்தில் வைத்து அவரை சந்திக்கும்படி கூறினார். நானும் குறித்த நேரத்திற்கு சென்றேன். அங்கே அப்துர் றஊப் மௌலவியும் சில ஆதரவாளர்களும் இருந்தார்கள். ஸலாம் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தேன். என்னைப்பார்த்ததும் சில ஆதரவாளர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
அப்போது அப்துர் றஊப் மௌலவி என்னை நோக்கி “என்னடாப்பா பிரச்சினை உனக்கு” என்று கேட்டார். அப்போது “நான் எல்லாம் அவனே என்னும் கொள்கை தொடர்பாக விளக்க வேண்டும்” என்று கூறினேன். அப்போது ஆதரவாளர்கள் சிலர் ஏளனமாக சிரித்தார்கள். அப்போது அங்கே வந்த மௌலவி மஜீத் (ரப்பானி) “இதையெல்லாம் மௌலவிக்கிட்டயா கேக்கிறது எனக்கிட்ட கேட்டிருக்கலாம்தானே, இல்லாட்டி மௌலவிட பயான் பீஸ் இருக்குதானே, அதைவேண்டிபார்க்கிறதுதானே” என்று பொறுமினார். அதற்கு நான் மௌனித்தேன்.
அப்போது அப்துர் றஊப் மௌலவி என்னைப்பற்றி விசாரித்துவிட்டு “உனக்கு ஹதீஸ் கலை தெரியுமா?, நஹ்வு இலக்கணம் தெரியுமா?, அரபு மொழிதான் தெரியுமா?” என்று சில அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். அதற்கு நான் “இவையெல்லாம் தெரியாது, ஆனால் எனக்கு எல்லாம் அவனே என்பதற்கு தெளிவான சான்றுகள் வேண்டும், அவளவுதான்” என்றேன்.
அப்போது அருகிலிருந்த மஜீத் (ரப்பானி) “தம்பி நீங்கள் முதலில் இவைகளை கற்றுக்கொண்டிவிட்டுத்தான் மௌலவிமார்களை நோக்கி கேள்வி கேட்கவேண்டும். நாங்கள் எல்லோரும் இந்த கொள்கைகளை மிகத்தெளிவாக நம்புகிறோம். பெரிய மௌலவி(அப்துர் றஊப் மௌலவி)யவர்கள் மற்றும் அவருடைய தந்தையார் போன்றோரும் இக்கொள்கை சார்ந்தவர்கள்தான். அப்படியிருக்கும்போது அரபு மொழியே தெரியாத உனக்கு ஏன் இந்த சந்தேகம்?” என்று கடுமையான அதட்டும் தொனியில் கூறியவுடன் அங்கிருந்த ஆதரவாளர்களும் ஆளாளுக்கு என்னை நோக்கி சில ஏளனமான வார்த்தைகளை வீசத்தொடங்கினர்.
அப்போது நான் புரிந்துகொண்டேன். ‘இது நமது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சபையல்ல’ என்பதை. உடனே அப்துர் றஊப் மௌலவியை நோக்கி ஸலாம் கூறிவிட்டு அந்த அலுவலகத்தில் இருந்து அவசரமாக வெளியேறிவிட்டேன். அதுவே என்னுடைய கால்கள் கடைசியாக அந்த இடத்தை மிதித்த இருதித்தருணமாகும்.
அதன்பின்னர் இஸ்லாமிய அகீதா ரீதியாகவும் இன்னபிற துறைகளிலும் என்னுடைய தேடல்கள் விசாலமாகின. அதற்கான அறிவையும் ஆற்றலையும் களங்களையும் மிகத்தாரளமாகவே அழ்ழாஹ் எனக்கு வழங்கினான். எல்லாம் வல்ல இறைவனின் பேருதவியாலும் அவன் என்மீது கொண்ட கருணையினாலும் 2002ம் ஆண்டு தொடக்கம் அத்வைத நச்சுக்கருத்துகளில் இருந்தும் அதனோடு ஒட்டிய வழிகேடுகளில் இருந்தும் முற்றுமுழுவதுமாக என்னை நான் தூய்மைப்படுத்திக்கொண்டேன். (அல்ஹம்துலில்லாஹ்.)
அதன்பயனாக இன்றைய நாட்களில் கடந்த ஐந்து வருடகாலமாக ஏகத்துவ பிரச்சார களத்தில் அப்துர் றஊப் மௌலவியுடைய அத்வைத சித்தாந்தங்களுக்கு எதிராக என்னுடைய பிரச்சாரங்களை பலதரப்பட்ட தடைகளையும் தாண்டி மிகவும் தீவிரமாவும் துணிச்சலாகவும் மேற்கொண்டுவருகிறேன்.
எனவே இவ்வாறு அந்த வழிகெட்ட சித்தாந்தங்களில் ஊறித்திளைத்திருந்த எனக்கு எல்லாம் வல்ல இறைவன் அவனுடைய சத்திய மார்க்கமான இஸ்லாத்தின் பால் தெளிவையும் அறிவையும் வழங்கியது போல் இன்னும் அந்த வழிகேடுகளில் மூழ்கிப்போயுள்ள எமது உடன்பிறவாத உறவுகளுக்கும் அழ்ழாஹ் மீட்சியை வழங்கவேண்டும் என அக்கறையுடன் பிரார்த்திப்போம்.

Leave a comment