அமைச்சர் ரிசாட் – கட்சியின் செயலாளர் வை எல் எஸ் ஹமீட் குற்றச்சாட்டு

yls hameedகொழும்பு: தற்போது இலங்கை சிறுபான்மை அரசியலில் ஒரு புதிய கலாச்சார வம்சம் தோன்றியுள்ளது. அந்த வம்சத்தை ‘நக்குண்டார் நாவிழந்தார்’ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என செல்லமாக அழைக்கின்றார்கள். அந்த புதிய கலாச்சார வம்சத்தை தோற்றுவித்த பெருமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் அவர்களையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது ஒரு காலத்தில் கேலிக் கூத்தாகி இருந்தது. பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2004ல் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை 109வது இடத்தில் வைத்திருந்தது.

அடுத்த 5 ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் மிக வேகமாக 162வது இடத்திற்குத் தாவியது. ஆயினும் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்ச்சிக் காலத்தில் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது மிகச்சிறப்பாக கட்டி எழுப்பப்பட்டு வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுவதில் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்சவினதும், பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வாவினதும் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்பதனை ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்ச ஆகியோரின் பாசறையில் செல்லப்பிள்ளையாக வளர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் அவர்கள் தற்போது ஊடகவியலாளர்களை தனக்கு சாதகமாக கையாள்வதில் மிகவும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராக திகழ்வதை நிகழ்கால அரசியலில் நாம் காணலாம்.

தனது முகஸ்தூதி பாடவும், மாற்றுக் கட்சிக்காரர்களை இகழவும், தூற்றவும் பல நூற்றுக்கணக்கான போலி முகநூல் கணக்குகளை திறக்கச் செய்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றார். அத்துடன் பல வாட்ஸ் அப் குழுமங்களை திறந்து தனது கட்சியை பிரபலப்படுத்தவும், தன்னை வாழ்த்தவும், கட்சிக்கு புதியவர்களை சேர்க்கவும் தனது முகவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மூலம் நாகரிகமற்ற முறையில் வங்குரோத்து அரசியல் நடாத்தி வருகின்றார்.

yls hameed

பணம் கொடுத்து பேஸ்புக்கில் தன்னை புகழ் பாடுகின்றார் அத்துடன் பேஸ்புக் தாதாக்களையும் உருவாகியுள்ளார் அமைச்சர் ரிசாட் என அவரது கட்சியின் செயலாளர் வை எல் எஸ் ஹமீட் அவர்களால் சிகரம் FM வானொலியில் நடாத்தப்பட்ட அரசியல் களம் நேரடி விவாத நிகழ்வில் குற்றசாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டமையானது ரிசாத்தின் ஊடக அநாகரீகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

ஊடகவியலாளர்கள் எண்ணற்று பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில், சில ஊடகவியலாளர்களை தனது செல்வாக்கு மூலம் தனக்கு விசுவாசமானவர்களாக மாற்றும் வண்ணம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு விருந்துகளை நடாத்தி, சமூகமளித்தவர்களுக்கு பண முடிப்புக்களையும் வழங்கி வருகின்றமையானது ரிசாத் தனது கட்சியை நடாத்திட ஊடக நெறிமுறைகளை எவ்வாறு கீழ்த்தரமாக பயன்படுத்துகின்றார் என்பதை புரிது கொள்ள முடியும்.

ஊடக நெறிமுறைகளை நன்கு அறிந்த, திறமையான ஊடகவியலாளர்கள் இவ்வாறான கேவலமான இரவு விருந்துகளை புறக்கணிப்பு செய்வதை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.இன்று ஊடகவியலாளர் பலரிடத்தில் ஊடக தர்மத்தை காணமுடியவில்லை. அமைச்சர் ரிசாத்தை போன்றவர்களால் அரசியலிலும் சிறந்த பண்பை காணமுடிவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.இது எதிர்காலத்தில் மாற்றம் பெற வேண்டும்.

ஊடக நெறிமுறைகளை மீறிய சில ஊடகவியலாளர்களை ‘நக்குண்டார் நாவிழந்தார்’ வம்சத்தைச் சேர்ந்தவர்களாக மாற்றிய பெருமை இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் அவர்களையே சாரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Published by

Leave a comment