கல்முனை: மனிதனாப் பிறந்த ஒவ்வொருவரினதும் உடலிலும் ஓடுகின்ற இரத்தமும் ஒரே இரத்தமாகும். அதன் நிறமும் சிவப்பாகும். இதுதவிர இந்நாட்டில் வேறு இரத்தம் உள்ளவர்கள் உடனடியாக என்னை சந்திக்கவும் என கல்முனை ரன்முத்துகல விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல தேரர் தெரிவித்தார்.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற (08) மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
இலங்கையில் சிவப்பு நிறம் தவிர்ந்த வேறு இரத்தங்கள் உள்ளவர்களை நான் கண்டது கிடையாது. ஒரே இரத்தம், ஒரே நாடு, ஒரே மக்களாக நாம் வாழும் நேரத்தில் இவ்வாறான மரநடுகை நிகழ்வுகள் நடைபெறுவது மனதிற்கு மகிழ்ச்சி தருகின்றது.விசேடமாக நல்லாட்சியில் எல்லோரும் இன மத மொழிகளை கடந்து நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம்.

இதே நிம்மதி தொடர்ந்தும் நிலவ வேண்டும். ஒரு அலுவலகத்தில் மூன்று இன மக்களும் இணைந்து வேலை செய்கின்ற போதுதான் அந்த அலுவலகத்தில் மகிழ்ச்சிப் நிலவும்.
அதேபோன்று கடந்த ஒருவருடத்திற்கு முன்பு நாம் பெற்ற நல்லாட்சியை தொடர்ந்தும் பேணிக்காப்பற்றுவது ஒவ்வொரு அரச ஊழியர்களின் தலையாய கடமையாகும். ஏனெனில், அரச அலுவலகங்களிளிருந்தே இந்நாட்டிற்கான சகல நிர்வாக செயற்பாடுகளும் முன் கொண்டு செல்லப்படுகின்றன.
எனவே இந்த விடயத்தில் வேற்றுமையகளை கழைந்து எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுவதுடன், மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.
Leave a comment