- சப்னி
பொத்துவில்: மைன்ட் அப் மன்றம் கடந்த 27 ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை பொத்துவில் மெதடிஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் காலை 9 மணி முதல் முழுநாள் நினைவாக ‘செய்இனி’ எனும் நிகழ்ச்சியை நடாத்தியது. மைன்ட் அப் மன்றமானது தேசிய ரீதியில் இயங்கி வருகின்ற ஒரு சமூக சேவை அமைப்பாகும். இவ்வமைப்பானது கல்வி, சுயதொழில் விருத்தி, சமூக நல்லிணக்கம், சூழற்பாதுகாப்பு, சுகாதாரம் என்ற ஐம் பெரும் விடயங்களை அடிப்படையாக கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது.
இதன் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், தயாரிப்பாளரும் ஆன திரு முஸர்ரப் மற்றும் TED மொழி ஒருங்கிணைப்பாளரும், WEB Engineer உம் ஆன திரு தாரிக் அஸீஸ் ஆகியோர் உள்ளனர்.
‘புள்ளிகளை ஒருங்கிணைத்தல்’ என்ற கோட்பாட்டின் பிரகாரம் உதவும் மனம் படைத்தவர்களிடமிருந்து உதவி தேவைப்படுபவர்களின் தேவைகளை நிறைவேற்றிவரும் இவ்வமைப்பு பல நலத்திட்டங்களையும் சமூக மாற்றத்திற்கான நல்லதொரு ஆரம்பப் படியையும் நிறைவேற்றியிருக்கிறது. அந்ந வகையிலேயே ‘செய்இனி’ நிகழ்வையும் நோக்க வேண்டும்.
கடந்த ஆண்டு பொத்துவிலில் ‘மாத்தி யோசி’ என்ற கருப்பொருளில் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் மாணவர்களுக்கான சுய ஆளுமை விருத்தியை உண்டு பண்ணும் வகையில் சாதனையாளர் கௌரவிப்பு, மாணவர் பரிசில்கள் வழங்கல் , போன்றனவற்றோடு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பொத்துவில் மண்ணைச் சார்ந்த துறைசார் ஆளுமைகளின் பேச்சுக்களையும் ஏற்பாடு செய்தது.

உலகில் எப்போதும் மாற்றி யோசித்தவர்களே பெரிதும் வெற்றியை சுவைத்திருக்கின்றார்கள் என்பதனையும் மாத்தி யோசிப்பதன் வழி மனித மனமாற்றத்தையும், வாழ்வின் விருத்தியையும் உறுதி செய்யும் வழிவகைகளையும் கட்டியம் கூறும் வகையில் அந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இம்முறை ‘செய்இனி’ எனும் தொனிப் பொருளில்’ இவ்வாண்டு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தது. ஒருவருக்கொருவர் குறை கூறித்திரிவதையும், மாற்றம் வேண்டும் என கோஷம் இடுவதையும் விடுத்து மாற்றத்திற்கான முதல் பங்காளராக நாம் ஒவ்வொருவரும் இருக்கும் வகையில் இனிமேல் செயலில் இறங்குங்கள் என்பதே ‘செய்இனி’ என்ற கருப்பொருள் கூறும் செய்தியாகும். இதன் வெளிப்பாடாகவே இந்நிகழ்ச்சியும் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டின் ‘செய்இனி’ நிகழ்வு முற்றிலும் மாறுபட்ட நிகழ்வாக அமைந்தது.

காலை நேர நிகழ்வாக, ‘மைன்ட் அப்’ மன்றத்தின் ஏற்பாட்டில் பொத்துவிலைச் சார்ந்த வருமானம் குறைந்த பெண்களின் வாழ்க்கைத்தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்தும் பொருட்டு இவ்வூரில் மறைந்து போயிருந்த நெசவுத்தொழிலை மீளக் கொண்டு வரும் வகையில் அவர்களுக்கு சில மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டு, விறபனைக்குத் தயாராகும் வகையில் உள்ள அவர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் இடம் பெற்றது. மேலும் குறித்த நெசவாளர்களுக்கான முதல் மாத சம்பளமும், இதற்காய் உதவி செய்தவர்களுக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது.
அதே போல் இளைஞர்களுக்கான ஆளுமை விருத்திப் பயிற்சிப்பட்டறையொன்றும் இடம் பெற்றது. இப்பயிற்சியை கண்டி Loyal ladies College, Wesswood College ஆகிய 2 சர்வதேச பாடசாலைகளின் அதிபரான திரு பாஸிர் முஹைதீன் மற்றும் Hira Group of company இன் பணிப்பாளரான திரு பாஸில் ஆகியோர் சிறப்புற நடாத்தினர்.
மேலும் பொத்துவிலில் வாழ்ந்து மறைந்த புகழ்பூத்த கவிஞர் அருட்கவிஞர் யுவன் எம் ஏ. கபூர் நினைவு ஆய்வரங்கம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாய்வரங்கத்தில் 4 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன.

மாலை நேர நிகழ்வாக பொத்துவில் மண்ணுக்கு சேவை செய்த இளைப்பாறிய முக்கிய ஆளுமைகள் 8 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 12 பேருக்கு மண்ணுக்கு மகிமை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதே போல் தேசிய ரீதியல் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசில்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அவ்வாறே 10 மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில்களும், 40 மாணவர்களுக்கான பாடசாலை கொப்பிகள், புத்தகங்கள் அடங்கலான பைகளும், ஒரு பாடசாலைக்கு 50 கதிரைகளும், பொது நூலகம் ஒன்றுக்கு புத்தகங்களும், தண்ணீர் வசதிகளற்ற 10 குடும்பங்களுக்கு 10 கிணறுகளும் வழங்கி வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் பல உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டன. வசந்தம் தொலைக்காட்சியின் ‘வாங்க பழகலாம்’ குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.
‘செய்இனி’ நிகழ்வானது, மைன்ட் அப் மன்றத்தின் புதுமையான மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தியதோடு, எதிர்காலத்தில் பொத்துவிலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படப் போவதை கட்டியம் கூறுவதாகவும் அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை.
Leave a comment