சாய்ந்தமருது: யஹ்யாகான் பௌண்டேஷனால் (யஹ்யா கான் சமூக நலன்புரி சேவைகள் மன்றம்) கடந்த 26ம் திகதி சாய்ந்தமருதுவில் பல்வேறு சமூகநலத் திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் வாழும் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் மின்சார, குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக யஹ்யாகான் பௌண்டேஷனின் ஸ்தாபக தலைவரான ஏ.பி. யஹியா கானினால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த 5 ஆம் அண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி ஒருவருக்கு நிதி உதவியையும் அவர் வழங்கி வைத்தார்.
இதேவேளை, யஹ்யாகான் பௌண்டேஷன் ஊடான இந்த சமூக நலன்புரித் திட்டத்தை எதிர்காலத்தில் தாம் அம்பாறை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விஸ்தரிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த 2016 ஆம் அண்டு இந்த திட்டத்தை பரவலாக்கும் வகையிலான கருத்திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன. வருமானம் குறைந்த மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கி தீர்வு காண வேண்டுமென்ற இலட்சியத்துடனேயே தான் இந்த சமூக நல பணியை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் யஹ்யாகான் பௌண்டேஷனின் (யஹ்யாகான் சமூக நலன்புரி சேவைகள் மன்றம்) உபதலைவர் அஸ்மி காரியப்பர், அல்ஜலால் பாடசாலை அதிபர் எம்.எஸ். நபார், ஆசிரியர் எம்.சி.எம் .மாஹிர், அல்ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர் மன்சூர், இப்ராகீம் ஆசிரியர் மற்றும் எம்.எம். முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a comment