றியாத்: சவுதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண், அந்தத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.அவரது தண்டனை சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் கருணை மனு சவுதி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திருமணமாகாத இலங்கையர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டே கடந்த ஆகஸ்டில் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் அவருடன் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை ஆணுக்கு 100 கசையடிகள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.இந்தப் பெண்ணின் தண்டனைக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த 45 வயதுப் பெண் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சவுதி அரேபியா இந்த மாதத்தின் முற்பகுதியில் உடன்பட்டிருந்தது. இப்போது அவரின் தண்டனை குறைக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் சவுதியின் ஊடகங்களில் உடனடியான கருத்துக்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
Leave a comment