சென்னை: தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று இந்திய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதுதொடர்பாக, மக்களவையில் அவர் தாமாக முன்வந்து புதன்கிழமை அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு, ரூ. 24,000 கோடி (இந்திய ரூபாய்) மதிப்பில் கடல் பாலம், சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியா வந்தபோது, அவருடன் இந்தத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிப்பதற்கு “ஆசிய வளர்ச்சி வங்கி´ தயாராக உள்ளது.
இதுதவிர, பங்களாதேஷ், பூடான், நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளிடையே தடையற்ற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் நிதின் கட்கரி.
Leave a comment