-
அபூ அஸ்ஜத்
ஒலுவில்: ஒலுவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல் கற்கைப் பிரிவை மூடுவதாக வெளிவந்த செய்தியினையடுத்து,அப்பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டையினை ஆரம்பிக்க தமது அமைச்சு 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்று இடம் பெற்ற போது,விவாதத்துக்கான பதிலுரையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒலுவிலில் அமைந்துள்ள பொறியியல் கற்கை பிரிவினை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக வெளியான செய்தியினையடுத்து உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களை தொடர்பு கொண்டு இந்த கற்கை நெறியின் முக்கியத்துவம் தொடர்பில் பேசினேன்.அதற்கு அவர் தெரிவித்தமை இப்பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டையொன்று அமைவதன் மூலம் இந்த பிரிவினை இயக்க முடியும் என்று இந்த வகையில் எனது அமைச்சு இந்த கைத்தொழில் பேட்டைக்கென 100 மில்லியன் ரூபாய்களை தமது அமைச்சு ஒதுக்கவுள்ளது.
அதே போல் வடக்கிலும்.கிழக்கிலும் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைக்கவுள்ளோம்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்,வழங்கவுள்ளோம்.அதுபோல் அடுத்தவருடம் திருகோணமலையிலும் கைத்தொழில் பேட்டையினை உருவாக்கவுள்ளோம்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் 10 இலட்சம் தொழில் வாய்ப்பினை உருவாக்கம் திட்டத்திற்கான பாரியதொரு பங்களிப்பினை எனது அமைச்சு பெற்றுக்கொடுக்கும்.
மக்கள் விடுதலை முன்னணி,மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்ல ஆலோசனைகளை முன் வைத்தார்கள்.அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கையினை எனது அமைச்சு எடுக்கும்.
அதுமட்டுமல்ல எனது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன்.முறையற்ற முறையில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பிலும்,இடம் பெற்றுள்ள மோசடி தொடர்பிலும் பாரிய உழல் மோசடிகளை விசாரிக்கும் பிரிவுக்கு இன்னும் சில தினங்களில் ஒப்படைக்கவுள்ளோம்.
எனது அமைச்சின் கீழ் உள்ள நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை லாபமீட்டும் நிறுவனமாக ஆக்குவதற்கு தேவையான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள்,மற்றும் அதனது உறுப்பினர்களுக்கு 6 மாத காலத்தை வழங்கியுள்ளேன்.அதற்கிடையில் நிறுவனத்தினை வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு,முன்னாள் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் மஜீத் அவர்கள் காரியவள திணைக்களத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்தில் உள்ளது.அவர்கள் முழுமையான உடன்பாட்டினை வழங்குவார்கள் எனில் பரந்தன் இராசய தொழிற்சாலை மற்றும் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை என்பனவற்றை மீள ஆரம்பிப்பதுடன்,4 ஆயிரம் பேர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கமுடியும்.
எனது அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்கள்,ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நாட்டின் நலனுக்காக பணியாற்றிவருகின்றனர்.இன்றைய அமைச்சின் இந்த விவாத்தின் போது அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும்,அதற்கு வெளியிலும் கைத்தொழில் துறை மேம்பாட்டுக்கு எந்த வகையிலான பங்களிப்பினை வழங்க முடியுமோ அதனை எனது அமைச்சு பெற்றுக்கொடுக்கும் என்ற உறுதிப்பாட்டை இதன் போது தருவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Leave a comment