மூதூர்: மூதூரில் கைவிடப்பட்டுள்ள வீதி விஸ்தரிப்புப் பணியை துரிதப்படுத்துமாறு கோரி இன்று திங்கட்கிழமை முதல் கால வரயரை இன்றிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது. மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி சந்தியில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கதிகமானோர் கலந்து கொண்டு இரண்டு வருடகாலமாக கைவிடப்பட்டிருக்கும் பெரிய பால சந்தியிலிருந்து நகரத்தை நோக்கிச் செல்லும் வீதி விஸ்தரிப்புப் பணியை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
பெரியபால சந்தியிலிருந்து மூதூர் பிரதேச செயலக சந்திவரை அரபுக்கல்லூரி வீதி, சந்தை வீதி ஆகியவற்றை இணைத்துச் செல்லும் இரண்டு கிலோ மீற்றர் வீதியினை விஸ்தரிக்கும் நோக்கில் வீதியில் இரு மருங்கிலும் இருந்த வியாபாரத் தலங்களும் குடிமனைகளும் எவ்வித நஷ்டயீடும் வழங்கப்படாது அவசர அவசரமாக அகற்றப்பட்டு வீதி விஸ்தரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட போதும் அப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் இவ்வீதியைப் பயன்படுத்துவதில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வரும் அதேவேளை பகுதியளவில் உடைக்கப்பட்ட குடிமனைகளையும் வியாபார தலங்களையும் சீரமைத்துக் கொள்வதில் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a comment