கொழும்பு: சவூதி அரேபியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்களை அனுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித்.பி.பெரேரா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
ஆசியாவில் இந்தோனேசியா போன்ற நாடுகள் தமது நாட்டு பிர ஜைகளுக்கு போதிய பயிற்சிகளை வழங்கியே வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.அதுபோன்று வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்குச் செல்பவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்கி அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்தார்.
உள்நாட்டில் போதிய வருமானம் ஈட்ட முடியாத காரணத்தினாலேயே பலர் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடு களுக்குச் செல்கின்றனர். எனினும் எமது அரசாங்கம் பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியும்.
இலங்கை பெண் ஒருவருக்கு கல் வீசி மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் வேலைவாய்ப்புக்களுக்காக சவுதி அரேபியாவுக்கு இலங்கையர்களை அனுப்புவதை அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
Leave a comment