- ஹாசிப் யாஸீன்
கல்முனை: பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனைக்கமைவாக கல்முனை தொகுதியின் மூன்று பிரதேச செயலகங்களையும் ஒன்றிணைத்து முதற்தடவையாக இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (04) கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டம் சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம், கல்முனை தமிழ் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ரீ.கலையரசன், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், விளையாட்டுக் கழங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கல்முனை தொகுதிற்குட்பட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் இனங்கண்டு அதனை உடனடியாக ஒப்படைக்குமாறு பிரதி அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


Leave a comment