நாற்பத்தொரு வருடங்கள் கடந்த பின்னரும் மனதை விட்டு இன்றும் நீங்காத ஹஜ் விமான விபத்து!

plane indonesia memorialமஸ்கெலியா: 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடையச் செய்த சம்பவம் அது. இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மக்கா நோக்கிப் பயணித்த மார்டின் எயார் டீ.சீ. 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறிய நாள் அது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறிப் பலியாகினர்.

இலங்கையைப் பொறுத்தவரை இது வரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும். மலையகத்திற்கு இது ஓர் அதிர்ச்சியளித்த புது அனுபவம். 191 பேரைப் பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலையை ஆங்கிலத்தில் ‘வில்கின் ஹில்ஸ்’ என்று அழைக்கின்றனர்.

இவ்விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியில் அவ்விடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டனர்.  அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப்பெண்ணின் உடலை அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்குக் கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும். அத்தோடு விபத்துக்குள்ளான விமானப் பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

plane indonesia memorial

ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திர அணைக்கட்டுக்குச் செல்லும் வழியில் சம்பவத்தை சுருக்கமாகத் தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடத்தில் சேரிக்கப்பட்ட டொலர் தாள்கள் உட்பட பல்வேறு பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அனைவரும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் ஒன்றும் அமைந்துள்ளது. ஆனால் இன்று அப்பகுதி காடாகக் காட்சியளிக்கின்றமை கவலைக்குரியதாக இருக்கின்றது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் இவ்விடத்திற்கு வந்து செல்வது பலருக்கு தெரியாத விடயமாகவுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டி தகவலின் படி தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளமை பின்னர் தெரியவந்தது.

இவ்விபத்துச் சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள் இன்னமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு சம்பவத்தை எடுத்துக் கூறுபவர்களாகவும் உள்ளனர்.

இவ்விமானத்தைச் செலுத்திய விமானி 8 தடவைகள் இலங்கை மார்க்கமாக மக்காவிற்கு விமானத்தை செலுத்திய அனுபவஸ்தர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இவ்வருடம் டிசம்பர் 4 ஆம் திகதியுடன் (இன்று) இவ்விபத்து இடம்பெற்று 41 வருடங்கள் கடந்து விட்டன.

இன்னமும் இச்சம்பவம் குறித்த நினைவுகளில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Published by

Leave a comment