றியாத்: இலங்கை பணிப் பெண் ஒருவரை கல்லெறிந்துக் கொலை செய்யும்படி, சவுதி நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ள தீர்ப்பு இன்று (வெள்ளி) நிறைவேற்றப்படவுள்ளதாக பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் தெரிவித்துள்ளார். இப் பெண்ணை விடுவிக்க உயர்மட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் நடப்பது கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.
இப்பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த வாரம் அந்த பெண்ணை தூதரக அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர் எனவும் கூறினார்.
இதனிடையே தண்டனைக்குள்ளான பெண்ணை விடுவிக்கும் முயற்சி எனக் கூறி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அந்த பெண்ணின் விடுதலைக்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சவுதியின் சட்டத்திட்டங்கள் தொடர்பில் சிந்தித்து மக்கள் செயற்பட வேண்டும் எனவும், மேன்முறையீட்டில் சாதகமான பதில் கிடைக்காவிடின் மேலதிக அழுத்தங்களை கொடுப்பது சிறந்ததாக இருக்கும் எனவும் சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மின் தாசிம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment