இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அரசிடம் கோரிக்கை
- கரீம் ஏ.மிஸ்காத்
பொத்துவில்: மஹிந்த ராஜபக்ஷ அரசு ஆட்சியில், அமைச்சரவை அங்கீகரித்து, இன்னும் வழங்கப்படாதுள்ள அனைத்து மௌலவி ஆசிரியர் நியமனங்களும் அவசரமாக வழங்கப்படவேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நல்லாட்சி அரசு அவசரமாக எடுக்கவேண்டும். அதற்காக முழு மந்திரி மற்றும் அரை மந்திரி பதவிகளை, பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும், அமைச்சரவையிலும், அமைச்சரவைக்கு வெளியேயும். பாராளுமன்றத்திலும் உரத்துக்குரல் கொடுக்கவேண்டும்.
அவ்வாறே. மாகாணசபைகளில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களும் தனி நபர் பிரேரணைகளை சபைகளில் முன்வைத்து, நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். என்பதே இலங்கையின் அனைத்து முஸ்லிம் கல்விச் சமூகத்தினதும், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தினதும் வினயமான கோரிக்கையாகும்.
நாட்டில் நடக்க முடியாத, சட்டம் இடம் கொடுக்காத நிகழ்வுகள் பல நிகழ்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், போதியவெட்டுப் புள்ளிகளைப் பெற வில்லை என்றும். வேறு சில காரணங்களுக்காகவும் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் மட்டும் முழுமையாக வழங்கப்படாது இற்றை வரை இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தம் அனுமதிக்காத, அதிகரித்த அமைச்சரவையை அமைக்க தேவையான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கொழுத்த அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியைக் கொண்டு செல்ல அது அவசியம் எனச் சொல்லப்பட்டது. அவ்வாறே, பாடசாலைகளில் சமயக்கல்வி முழுமை பெற மௌலவி ஆசிரியர் நியமனம் அவசியம் என்பதை நல்லாட்சி அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மௌலவி ஆசிரியர் நியமனம் மட்டும் நல்லாட்சியில் பங்காளிகளாயிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சமய நலனைக் கருத்திற் கொண்டு ஏன் செய்யப்பட முடியாது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் முயற்சிக்கக்கூடாது.
இத்தனைக்கும் மேலாக, கடந்த அரசாங்கத்தில் சுமார் 704 பேர் மாத்திரமே தகுதி காண் போட்டிப் பரீட்சையில், வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப்பெற்று, நியமனத்திற்குத் தகுதி பெற்றிருந்த நிலையில். அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கமைய, நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த 3,174பேருக்கும், நியமன தகுதிகாண் நியதிகளைத் தளர்த்தி, அழகியல் கல்வி பாடத்துறையில் அட்டவணைப் படுத்தப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவென, அமைச்சரவை அங்கீகரித்த 424 மௌலவி ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பம் 1565 வர்த்தமானி மூலம் 2008.06.29இல் கோரப்பட்டு, 2008.11.22இல் போட்டிப் பரீட்சையும், 2009.11.27இல் நேர்முகப்பரீட்சையும் நடாத்தப்பட்டு, மொத்தம் 148 நியமனங்கள் மாத்திரம் 2010இல் வழங்கப்பட்டது.
இதன்படி, முதலாம் கட்டத்தில் 64 நியமனங்களும், இரண்டாம் கட்டத்தில் 212 நியமனங்களும் வழங்கப்படாது 2010 முதல் எஞ்சியிருக்கின்றது.
2009க்குப் பின்னரான வெற்றிடத்தினைக் கணக்கிட்டால் இப்பட்டியல் இன்னும் நீண்டு செல்லும்.
ஆகவே, அனைத்து மௌலவி ஆசிரியர் நியமனங்களும் எவ்வித கால தாமதமுமின்றி உடனடியாக வழங்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அவசரமாக எடுக்கப்படல் வேண்டும். அதற்கு அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரல் வேண்டும்.
Leave a comment