- ஹாசிப் யாஸீன்
அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், 1 கோடி 15 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.
மாகாண எழுச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பிரதி அமைச்சர் ஹரீஸ், அட்டாளைச்சேனை றஹ்மானியா சிறுவர் கடற்கரை பூங்காவுக்கு 35 லட்சம் ரூபாவினையும் பாலமுனை விளையாட்டு மைதான சுற்றுமதில் அபிவிருத்திற்கு 20 லட்சம் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் உயர்மட்டக் குழுவினர் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய விளையாட்டு மைதானங்களுக்கு அண்மையில் நேரடியாக விஜயம் செய்து அங்கு நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து கொண்டனர்.
இதற்கமைவாக அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்காக தலா 20 லட்சம் ரூபா வீதம் 60 லட்சம் ரூபாவினை பிரதி அமைச்சர் ஹரீஸ் விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக இணைப்புச் செயலாளர் அன்ஸில் மேலும் தெரிவித்தார்.
Leave a comment