றியாத்: இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத், தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார்.
இறைவனை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பலஸ்தீன அகதியான அவருக்கு, முதலில் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறையும், 800 கசையடிகளும் விதித்து தீர்ப்பளித்தது.
பின்னர் அவர் மேல்முறையீடு செய்தபோது அது நிராகரிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வேறு ஒரு நீதிபதி வழக்கை விசாரித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.அவரது சார்பாக நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
மரண தண்டனை மீது மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பாலஸ்தீனியர் என்பதாலும், சவுதியிலுள்ள மதக்காவல் துறையினர் ஒரு ஆளை அடித்து நொறுக்குவதை காட்டும் வீடியோவை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாலுமே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
Leave a comment