மது, சிகரெட் தடை: ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம்

maithiriகேகாலை: மதுபானம், சிகரெட் விற்பனை வரி மூலம் வருடமொன்றிற்கு 115 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.மது விற்பனையைத் தடை செய்ய முடியும், எனினும் மதுபானம் உபயோகிப்போர் கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைத் தடுக்க முடியாது போகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் தலைவர் என்ற வகையில் மது மற்றும் சிகரட் விற்பினைக்கான அனுமதியை இரத்துச் செய்யத் தயார்.

எனது இரு கரங்களையும் உயர்த்தி முழுமையான ஆதரவை என்னால் வழங்க முடியும். எனினும் அது நடைபெறக்கூடிய காரியமல்ல. விற்பனையைத் தடை செய்ய முடியும் எனினும் குடிப்பதை நிறுத்த முடியாது. அவர்கள் ஒன்றிணைந்து அரசையே கவிழ்ப்பது உறுதி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைத் தடுப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயற்பாட்டு நிகழ்வு நேற்று கேகாலை சென். ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

அமைச்சர்கள் கபீர் ஹாசிம், ரஞ்சித் சியம்பலாபிட்டிய உட்பட அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

சிகரட் மற்றும் மது அருந்துவோரினால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உலகில் குறிப்பாக மெக்சிகோ போன்ற நாடுகளில் மது கட்டுப்படுத்தல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஹெரோயின் ஹசீஸ் மர்ஜுவான் போன்ற போதைவஸ்து வர்த்தகர்களால் உலகளவில் அரசாங்கங்களை உருவாக்குவதிலும் கவிழ்ப்பதிலும் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர். நாடுகளுக்கிடையில் போதைவஸ்து தொன் கணக்கில் பரிமாற்றப்படுகின்றது. இதன் மூலம் உலகில் போதைவஸ்து எந்தளவு முக்கியமானதொன்றாக உள்ளது என்பதை உணர முடிகிறது.

ஒரு பக்கம் உலக நாடுகள் மது ஒழிப்பு போதை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை, மறுபக்கம் இத்தகைய செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. சட்டத்தினால் இதனை கட்டுப்படுத்த தண்டனைகளை வழங்க முடியும். நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உச்ச அளவில் அதனை மேற்கொள்கின்றோம்.

எனினும் சமூக ரீதியில் தேவையான சமூக மறுசீரமைப்பு முக்கியமாகிறது. இதனால் மது பாவனையைக் கட்டுப்படுத்துவதே எமது செயற்பாடாக வேண்டும்.

இதற்கு பொலிஸார், மாவட்ட, பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்கள் தத்தமது நிறுவனங்களில் மதுபானம் சிகரட் பாவிப்பதை நிறுத்த வேண்டும். இதற்காக நாம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கான வழிகாட்டல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் முதன்மையானதாகவும் முன்னுதாரணமானதாகவும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களிலும் இதற்கென ஒரு பிரிவை ஏற்படுத்தி செயற்படுத்துவது முக்கியமாகும்.

கேகாலையில் சில தேநீர் சிற்றுண்டிச்சாலைகளில் சட்டவிரோதமாக மதுபானம் அருந்துவதற்கு இடமொன்றை ஒதுக்கியுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

போதை ஒழிப்பு மாவட்ட ரீதியான செயற்பாடுகளில் நாம் இனங்கண்ட விடயங்களில் நாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் போதை மதுபானங்களினால் பாதிக்கப்படுபவர்களில் வருடாந்தம் 40,000 பேர் மரணிக்கின்றனர்.

இத்தகைய சமூக சீர்கேடுகளை விளைவிக்கும் போதையை ஒழிக்கும் நடவடிக்கையில் பாடசாலை மாணவர்கள் முதலில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.

மலையகத் தோட்டப்புறச் சமூகத்தினர் மதுபோதை உபயோகத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் தமது வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி மதுவுக்கே செலவிடப்படுகிறது.

பாடசாலை மட்டத்திலும் மாவட்ட பிரதேச, பிரதேச அபிவிருத்தி சபை மட்டத்திலும் இதற்கான விழிப்புணர் வுகள் வழக்கப்படுவது முக்கியமாகும். அரச, தனியார் துறை நிறுவனங்களில் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மது, சிகரட் பாவனையை நிறுத்தி சமூகத்திற்கு முன்னுதாரணமாக வழிகாட்ட முடியும்.

அப்போதுதான் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றியளிக்க முடியும். சட்டத்தினால் மட்டும் இதனை மேற்கொள்ள முடியாது. பலவந்தமாகவும் இதனைச் செய்விக்க முடியாது.

தற்போது இலங்கையில் சட்டபூர்வ மது, சிகரெட் விற்பனை மூலமான வரி யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே கிடைக்கின்றது. இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் மட்டக்களப்பு மாவட்டமும் பதிவாகிறது. இத்தகைய மாவட்டங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மதுபாவனையே பெரிதும் பாலியல் துஷ்பிரயோகம், பாரிய வன்முறை துன்புறுத்தல்களுக்கும் வறுமைக்கும் காரணமாகின்றன. இது தொடர்பிலான சமூகப்பொறுப்பு மிக முக்கியமாகிறது.சிறந்த நாடொன்றை, உலகின் முன்னுதாரணமான நாடாக இலங்கை யைக் கட்டியெழுப்ப போதையிலி ருந்து நாட்டை மீட்போம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற் படுவோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment