- மதியன்பன்
மேகம் கறுத்த போதே
சில தவளைகள்
மெல்லத் தலை நீடடின…
ஒப்பாரி வைப்பதற்கு
ஆமைகளையும், பாம்புகளையும்
அவை
அருகிலே வைத்துக் கொண்டன…
வற்றிப்போன குளத்திலே
வட்டமேசை போட்டு
மழையின் வரவைத் தடுக்க
மனுக்கள் தயாரித்தன…
ஏமாற்றித் திரியும்
சில
எருமை மாடுகள்
அதற்கு
ஒப்பமிட்டு ஒத்துழைப்பு வழங்கின…
மழை வேண்டாமென
கரப்பான் பூச்சிகள் சில
வீதியில் இறங்கி
ஆர்ப்பாட்டம் செய்தன…
பல்லிகள் பல
அதற்கு
பக்கவாத்தியம் பாடின…
காக்கைகள் சில
அவை பார்த்து
கரகோசம் செய்தன…
போதாக் குறைக்கு
பெருச்சாலியொன்று
மரத்திலே ஏறி நின்று
கூக்குரலிட்டது…
எல்லாமே பொய்த்துப் போக..
இடி மின்னல் முழக்கத்துடன்
பெரும் மழை வந்தது..
பெரும் பகுதியை கழுவிச் சென்றது.
போலியாய் கட்டிய
மணல் வீடுகள் அத்தனையும்
அந்த
அடை மழையில்
அழிந்து போயின…
மழை வருவதும்
தவளைகள் கத்துவதும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது…
-மதியன்பன்
Leave a comment