கொழும்பு: அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாக ராஜபக்ச குடும்பம் மீண்டும் அரசியலுக்குள் வரும் சந்தர்ப்பம் உருவாகும் என கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச அரசாங்கத்தை விட சேதம் ஒன்றை ஏற்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ராஜபக்சவை தோற்கடித்த அநீதியென மக்கள் சிந்திக்கக் கூடும்.
சமூகத்திற்கு ஏற்பட்டு வந்த பாரிய சேதம் காரணமாகவே நாங்கள் ராஜபக்சவினரை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தோம். ராஜபக்சவினருக்கு சிங்கள சமூகத்திற்கு மத்தியில் இன்னும் ஆதரவு இருந்து வருகிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக ராஜபக்சவினர் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படும்.
ஏற்பட்டு வரும் நிலைமையை பார்த்தால் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது போல் மீண்டும் நடைபெற பாரிய வாய்ப்பு இருப்பதாகவும் தேவசிறி சுட்டிக்காட்டியுள்ளார். 2002 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் 2004 ஆண்டு கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையே நிர்மல் ரஞ்சித் தேவசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment