“புலிதேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது”- ரணில்

pulidevanகொழும்பு: இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப் புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் சீவரட்னம் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேறிய தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்தபோதே பிரதமர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, வடக்கில் மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து, மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைக்க உதவிய காரணத்திற்காக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

pulidevan
சீவரட்னம் புலிதேவன்

ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுடன் நடத்திய கொடுக்கல்வாங்கல்கள் பிழைத்துபோன காரணத்தினால் தான், இராணுவத்தின் மீது குற்றம்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிலை ஏற்பட்டதாகவும் இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் தொடர்பில் ஆற்றிய உரையில் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

புலித்தேவன் குழுவினர் சரணடைவதை களத்தில் உள்ள தளபதிகள் எடுக்காமல், கொழும்பில் இருந்து உத்தரவுகள் போனதால்தான் அங்கு குழப்பம் ஏற்பட்டதாக கூறிய பிரதமர் ரணில், அந்த வெள்ளைக்கொடி விவகாரம் மாத்திரம் நடக்காமல் இருந்திருந்தால் இலங்கை இராணுவத்துக்கு எதிராக எவரும் பெரிதாக குற்றங்களை கூறியிருக்க முடியாது என்ற வகையிலும் பேசியுள்ளார்.

அத்துடன், விடுதலைப்புலிகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவர்களுடன் போருக்கு போக நேர்ந்தது தற்செயலாக நடந்த ஒரு விடயம் என்றும் அவர் கூறினார்.

மாவிலாறு விவகாரத்தில் பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்கள் எடுத்திருந்த நடவடிக்கைகளே அரசாங்கம் யுத்தத்திற்கு போகக் காரணம் என்றும் ரணில் தெரிவித்தார்.கடந்த காலங்களில் நடந்த தவறுகளை திருத்திக்கொண்டு சிறந்த எதிர்காலத்தை நோக்கிசெல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இன்று நடந்த விவாதத்தில் மகிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில், விக்ரமசிங்க தனது கேள்விகளுக்கு அவரிடம் பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று பேசவில்லை. வெள்ளைக்கொடி ஏந்திவந்த விடுதலைப்புலித் தலைவர்கள் தொடர்பில் தங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று அப்போது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment