கொழும்பு: அண்மையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டியெடுக்கப்பட்ட உடல், மர்மமான முறையில் கொல்லப்பட்ட ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடலா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக விசாரணை ஒன்றை நடத்திவருவதாக பொலிஸார் கொழும்பு குற்றவியல் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். மரபணு பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பொலிசார் தெரிவித்தனர்.
இதற்காக தாஜுதீனின் தாயாரிடம் இருந்து ரத்த மாதிரிகளைத் தாம் பெறவுள்ளதாகவும் அவர்கள் கூறினர். தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை 32 பேரை விசாரித்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர். இதனையடுத்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் மாதம் பத்தாம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

2012ஆம் ஆண்டில், கொழும்பு நாரஹேன்பிட்டியில் வாகனத்தில் சென்ற வேளையில், வசீம் தாஜுதீன் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக அப்போதைய அரசாங்க ஆட்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இக்கொலை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என தாஜுதீனின் உறவினர்கள் குற்றச்சாட்டிவந்தனர்.
அந்த நிலையில் புதிய அரசாங்கம் தற்போதைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a comment