லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம், குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், ஆதலால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளது.லன்காஷயரில் – பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், தாயின் கடவுச்சீட்டில் பதியப்பட்டு, அவருடன் வந்துள்ளார்.
அண்மையில் அவரது தொழில்தருனருக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது, அதில் ஐக்கிய இராச்சியத்தில் இவர் இருப்பதற்கான அனுமதி காலாவதியடைந்துவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகம் வின்னி பேர்க்கின்ஹெட் இன் குடிவரவு அந்தஸ்தை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கிவிண்ணப்பம் கிடைத்தால், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணியாளராக தொழில்புரியும் பேர்கின்ஹெட் தனது அம்மாவுடன் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்து வந்து ஒரு வருடம் கழித்து தன் அம்மாவுடன் சேர்த்து தானும் பிரித்தானியப் பிரஜையாகி விட்டதாக எண்ணியிருந்திருக்கிறார்.
வாகன சாரதி அனுமதி அட்டை, தேசிய சுகாதார சேவை ஆகியவற்றையெல்லாம் தான் எடுத்தபோது ஏன் இதனை கண்டுபிடித்து அதிகாரிகள் தனக்கு தெரிவிக்கவில்லை என்று அவர் கேட்கிறார். அப்போதே தனக்கு அவை குறித்து தெரிந்திருந்தால் ஏதாவது செய்திருப்பேன் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் தற்போது பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதியளிக்கும் காலவரயற்ற வதிவிட வீசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறை பூர்த்தியடைய 6 மாதங்கள் தொடக்கம் 12 மாதங்கள் வரை செல்லாம்.
இந்தக் காலகட்டத்தில் அவருக்கு வேலை செய்ய அனுமதி இருக்காது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது, தான் 47 வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதை அதிகாரிகளுக்கு நிருபிப்பதற்காக ஆதாரங்களை சேர்த்து வரும் அவர் நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து தனக்கு நிறைய ஆதரவு கிடைப்பதாக கூறியுள்ளார்.

Leave a comment