
இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இப்றாஹீம் நபியின் தியாகத்தை உணர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக இன்று நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.
இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் உன்னத பணியை செய்ய முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.
எமது நாட்டில் நாம் சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடுகின்ற இன்றைய நிலையில் உலகின் பல பிரதேசங்களில் பல்வேறு துன்பங்களுடன் எமது சகோதர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக எதிரிகளின் கைகளை முடக்கவேண்டி இரு கையேந்தி நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்கவேண்டும்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இன்றைய நல்லாட்சியில் முஸ்லிம்கள் பொறுமையுடன் வாழ்ந்து எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கான இருப்பினை பெற பிரார்த்திப்பதோடு எமக்கு முன்னுள்ள சவாலை புத்திசாதுரியத்துடன் எதிர்கொள்ள முனைய வேண்டும்.
இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் முழு உலக பல்லின மக்களுக்கும் பொதுவானதே. இதனை புரிந்து கொண்ட பலர் தமது காழ்ப்புணர்ச்சியினை பல்வேறு கோணங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க எத்தனிக்கின்றனர். இதனை முறியடிப்பதற்கு முதலில் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த ஒன்றிணைவின் மூலம் தகுந்த பாடம் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு புகட்டப்பட வேண்டும்.
இதற்கான முன்மொழிவுகளை இன்றைய இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும் ஒன்றித்து எடுக்கவேண்டிய தருணம் வந்திருக்கின்றது. இந்நன்நாளில் அதற்கு அடித்தளமிட பிரார்த்திப்போமாக எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment