- எம்ஐ.அப்துல் நஸார்
கொழும்பு: கட்டார் நாட்டில் சேவையாற்றும் இலங்கையர்களின் சம்பளத்தினை நவம்பர் மாதம் தொடக்கம் வங்கி மூலமாக வழங்குவதை கட்டாயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள அண்மையில் மத்திய கிழக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அந்த நாட்டு அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக அந்த நாட்டின் தொழில் மற்றும் நலன்புரி அமைச்சர் அப்துல்லா ஸாலியா அல் குலாபி இதனை தெரிவித்தார்.
இவ்வாறு வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கப்படுவதன் காரணமாக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற முறைப்பாடுகளை குறைக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சர் தலதா அத்துக்கோறள தெரிவித்தார்.
கட்டார் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர்கள் சம்பந்தமான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோறள தெரிவித்தார்.
சுமார் 145,000 இலங்கையர்கள் கட்டார் நாட்டில் பணிபுரிகிறார்கள் எனினும் சுமார் 107,000 இலங்கையர்களே அங்கு பணிபுரிவதாக தூதரக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
Leave a comment