வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டாலும், அவர் மீதான எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றவில்லை என்று நோபல் பரிசு வழங்கும் குழுவின் முன்னாள் செயலர் தெரிவித்துள்ளார். ஒபாமாவுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஒரு ஏற்றம் கிடைக்கும் என தமது குழுவினர் நம்பினர் என்று, அக்குழுவின் முன்னாள் செயலர் கெயிர் லுண்டெஸ்டாட் தமது நினைவலைகளில் கூறியுள்ளார்.
அவருக்கு விருது வழங்கப்பட்டது அமெரிக்காவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது என்றும், அந்த விருதுக்கு அவர் தகுதியானவர் அல்ல எனப் பலர் வாதிட்டனர் என்றும் லுண்டெஸ்டாட் தெரிவித்துள்ளார்.
“தனக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது” என்று ஒபாமவே தெரிவித்திருந்தார் என்றும் அவரது சில ஆதரவாளர்கள்கூட அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது தவறு எனக் கருதினர் என்றும் லுண்டெஸ்டாட் தனது நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட பரிசை ஏற்றுக்கொள்வதை தவிர்க்க நார்வேவுக்கு செல்லாமல் இருக்க முடியுமா என்பது குறித்து ஒபாமா பரிசீலித்தார் என லுண்டெஸ்ஸ்டாட்டின் நினைவுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு, சீனா அரசுடன் மாற்றுக் கருத்தை உடைய லூஷியாபோவுக்கு விருதை வழங்க வேண்டாம் என அப்போது நோர்வேயின் வெளியுறவு அமைச்சராக இருந்த யொனஸ் கார் ஸ்டோர் அழுத்தம் கொடுத்தார் எனக் கூறும் லுண்டெஸ்டாட் தமது குழுவினர் அதை நிராகரித்தனர் எனவும் கூறியுள்ளார். லூஷியாபோவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டால், அது சீனாவுடனான தமது உறவை பாதிக்கும் என நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் வாதிட்டார் என அவர் கூறுகிறார்.
Published by

Leave a comment