காத்தான்குடி: தரம் 5 புலமைப்பரிசில் என்றாலே பிள்ளைகளின் பெற்றோருக்கு அலர்ஜிதான் குறிப்பாக தாய்மார் படும்பாடு எண்ணிலடங்காதவை ஏனெனில் எவ்வளவுதான் மிகவும் கஷ்டப்பட்டு கற்பித்தாலும் பரீட்சை நேரத்தில் பிள்ளைவிடும் தவறினால் அப்பரீட்சையில் அனேகமான பிள்ளைகள் சித்திபெறாது விடுகின்றமை துரதிருஷ்டவசமாகும்.
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வரவிருக்கின்ற நிலையில் மாவட்டத்திற்கு மாவட்டம் வெட்டுப்புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவுசெய்கின்றமை ஒரு நடைமுறையாக இருந்து வருகின்றது. அதனால் பிள்ளைகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்ற நிலையும் ஏற்படுவதை காணலாம்.
பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் ஒரு பார்வையிலும் சித்திபெறாத மாணவர்கள் மற்றொரு பார்வையிலும் நோக்கப்படுவதானது மற்றொரு மன உளைச்சலுக்கு பிள்ளைகளை இட்டுச்செல்கின்றது. இப்பாரபட்சம்; எம்மத்தியில் கூடுதலாக காணப்படுகிறது. பரீட்சையில் சித்திபெறாத மாணவர்களை பெற்றோர் தண்டிப்பதுடன் தரக்குறைவான வார்த்தைப்பிரயோகங்கள் பாவிப்பது அப்பிள்ளைக்கு பாரிய மனவேதனையை உண்டுபண்ணும் இது தவிர்க்கப்படவேண்டும்.
இது மாத்திரமல்ல பாடசாலைகளில் சித்திபெறாத மாணவர்களை ஒதுக்கிவைத்தல் பரிசளிப்பு நிகழ்வுகளின்போது சித்திபெற்ற பிள்ளையை மாத்திரம் மாலை அணிவித்து கௌரவிப்புக்கள் செய்தல், அதிதிகளால் பாராட்டு தெரிவித்தல் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாடசாலை மட்டத்தில் சித்திபெற்ற விழாக்கள் நடாத்தும்போது பரீட்சை திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 80 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற பிள்ளைகளையும் சேர்த்து கௌரவித்தல் ஒரு ஆரோக்கியமான விடயமாகும்.
பரீட்சை எழுதிய பிற்பாடு உளவியல் ரீதியாக பிள்ளைகளுக்கு பரீட்சை முடிவுகள் தொடர்பான பல விடயங்களை எடுத்துக்கூற வேண்டும்.
‘எந்த முடிவாகிலும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவன் நமக்கு அளித்தபடிதான் வெற்றியோ தோல்வியோ கிடைக்கும். சிறு வயதிலிருந்தே எதையும் நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்’ என தங்களது மழலைச்செல்வங்களுக்கு அடிக்கடி கூறுவதை விடுத்து பாரிய நம்பிக்கையுடன் இருப்பதால் முடிவுகள் மாறி வரும்போது, அதை தாங்கிக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு பிள்ளைகளும் நாமும் தள்ளப்படுகின்றோம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
இந்த புலமைப்பரிசில் பரீட்சையினை நிறுத்துவதற்காக 2013 காலப்பகுதியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது கைகூடவில்லை. ஏனெனில் புலமைப்பரிசில் பரீட்சையின் தாற்பரியம் அதனால் சித்திபெற்ற பிள்ளைகள் தற்போது நல்ல நிலைமையில் உள்ளதோடு பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து பரீட்சையில் சித்திபெற்று தற்போது கொழும்பு போன்ற இடங்களில் உயர் பதவிகளில் கடமைபுரிந்து வருகின்றமை இவ்வாறான காரணங்களால் தடுக்கப்பட்டது.
மாத்திரமன்றி இதனை நம்பி தமது ஜீவனோபங்களை மேற்கொள்ளும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் புத்தகங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அச்சிடுவோர் கையேடுகள் தயாரித்து விற்பனை செய்வோர் அதிகமாக காணப்படுவதும் இவை நிறுத்தப்படாமைக்கான சான்றுகளாகும்.
அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் போன்றதொரு பரீட்சை தரம் 8 இலும் நடாத்துவதற்கான பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டமை இங்கு குறிப்படத்தக்க விடயமாகும்.
எது எவ்வாறு இருப்பினும், இச்சிறிய வயதில் அதிகளவாக கற்கப்படும் பாடநெறிகளினூடாக அறிவு வளர்ச்சி விருத்தியடைவதோடு, தாங்கள் கற்கின்ற கிரகிக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் எதிர்கால கல்விக்கு பயனுள்ளதாக அமையும் என்பதுடன் எந்த முடிவினையும் ஏற்றுக்கொண்டு திருப்தியடையக்கூடிய மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளாகிய நாம் வளத்துக்கொள்வது இன்றியமையாததாகும்.
Published by


Leave a comment